குறி பார்த்து முட்டையை வீசிய "கார்னர்" பாஸ்கர்.. தல்லாகுளம் அக்கப்போரில் ஒரு காட்சி!
மதுரை: அதிமுகவினர் அக்கப்போர் மறுபடியும் மதுரையைப் பதம் பார்த்து விட்டது. அடங்கிப் போன ஒரு விஷயத்தை இன்று மறுபடியும் எழுப்பி ஊதி பெரிதாக்கி விட்டனர். அதிலும் இன்று கார்னர் பாஸ்கர் என்பவர் செய்த சேஷ்டைதான் சற்று சுவாரஸ்யமானது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முன்ஜாமீன் பெற்று, மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று வந்தார்.
இதையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு விட்டனர். மகளிர் அணியினரும் கையில் துடைப்பமும், வாயில் கெட்ட கெட்ட வசவுகளுமாக குவிந்து காத்திருந்தனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் வந்தபோது அவருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். அதற்கு முன்னதாக கார்னர் பாஸ்கர் என்ற அதிமுக கவுன்சிலர் கை நிறைய முட்டையுடன் வந்திருந்தார். இளங்கோவனை நோக்கி வீசப் போகிறாரோ என்று அனைவரும் காத்திருக்க, அவரோ போலீஸ் ஸ்டேஷனை நோக்கி முட்டையை குறி பார்த்து வீசி அடித்தார்.
அதாவது இளங்கோவன் வருவதற்கு முன்பாகவே அட்வான்ஸ்டாக முட்டையை வீசி வி்ட்டார். இதைப் பார்த்த போலீஸார், அவரிடம் வந்து போங்க சார் என்று அனுப்பி வைத்தனர்.
இது காங்கிரஸாருக்கு செம கடுப்பை ஏற்றியது. காவல் நிலையம் மீது ஒருவர் முட்டை வீசுகிறார். அவரைக் கைது செய்யாமல் பத்திரமாக அனுப்பி வைக்கிறார்களே என்று போலீஸாரை கடுமையாக விமர்சித்தனர்.