‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ எனப் பேசுவதா?- மா.சு. அறிக்கைக்கு அதிமுக கவுன்சிலர்கள் கண்டனம்
சென்னை: மக்களுக்காக அதிகாலையில் இருந்து இரவு வரை பணியாற்றுகின்ற மேயர் சைதை துரைசாமி குறித்து அவதூறாக அறிக்கை வெளியிட்டதாக முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனுக்கு சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் திமுக காலத்தில் சென்னை மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்கள் இன்னும் காட்சிப் பொருளாக இருப்பதாக சுட்டிக் காட்டியிருந்தார்.
மேலும், தற்போதைய மூன்று ஆண்டு கால ஆட்சியில் அதிமுக செய்த சாதனைகள் மற்றும் திமுகவின் முந்தைய சாதனைகள் குறித்து செய்தியாளர்கள் முன்னிலையில் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் அதில் சவால் விட்டிருந்தார்.
இந்நிலையில், மா.சுப்பிரமணியனின் அறிக்கைக்கு அதிமுக கவுன்சிலர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் அவர்கள் கூறியதாவது :-
அறிவுஜீவியைப் போல...
முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் எல்லாம் தெரிந்த அறிவுஜீவியை போல, எதையும் தெரிந்து கொள்ளாமல், மக்களுக்காக அதிகாலையில் இருந்து இரவு வரை பணியாற்றுகின்ற மேயர் சைதை துரைசாமி பற்றி அவதூறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஒரே மேயர்...
மேயர் சைதை துரைசாமி சி.ஐ.டி. நகரில் உள்ள அவரது வீட்டில்தான் வசித்து வருகிறார் என்பதும், தினமும் மக்களை அங்கேயே சந்திக்கிறார் என்பதும் சென்னை நகர மக்களுக்கே தெரியும். அதிகாலை 5.30 மணியில் இருந்தே மக்களை சந்தித்து வரும் ஒரே மேயர் அவர்தான். ஆனால், இவர் மட்டும் இதை மறைத்து பொய்யாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
புள்ளி விவரங்கள்...
மாநகராட்சி மன்ற கூட்டத்தில், மேயர் சைதை துரைசாமி புள்ளி விவரங்களோடு, அம்மா வழிகாட்டுதலின்படி, எவ்வளவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது?, எவ்வளவு பணம் செலவிடப்படுகிறது?, இதற்காக எவ்வளவு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன? என்பதை தெரிவித்தார்.
ஒரு பானை சோற்றுக்கு...
முன்னாள் மேயர்கள் மு.க.ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் ஆகியோர் மேயர்களாக இருந்த காலத்தோடு ஒப்பிட்டு, இப்போது அம்மா காலத்தில் எவ்வளவு வேகமாக பணிகள் நடைபெறுகின்றன என்பதை தெரிவித்தார். மா.சுப்பிரமணியன் அறிக்கையில் அதற்கு பதிலையே காணோம். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பார்கள்.
அம்மா உணவகம்...
அம்மா ஜெயலலிதாவின் சிந்தனையில் உதித்த ‘அம்மா உணவகம்' பற்றி மற்ற மாநிலத்தினரும், ஏன் வெளிநாட்டினர் கூட பாராட்டுகிறார்கள். இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்.
வாய் சவடால்...
பத்திரிகையாளர் முன்னிலையில், மு.க.ஸ்டாலினோடும், அவரோடும் (மா.சுப்பிரமணியன்) விவாதிக்க தயாரா? என்று வாய் சவடால் விட்டு இருக்கிறார். ஒரு எம்.எல்.ஏ.வான மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி கூட்டத்திற்கு வரலாம். அங்கு வந்து தன்னிடம் உள்ள புள்ளி விவரங்களை தெரிவிக்கலாம். மேயர் சைதை துரைசாமி கூறும் புள்ளி விவரங்களை கேட்டுச்செல்லலாம். யார் காலத்தில் அதிக பணிகள் நடைபெற்றது என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். இதைத்தான் மேயர் ஒவ்வொரு மன்ற கூட்டத்திலும் கூறி வருகிறார்.
வீண் ஜம்பம்...
அதுவரை, ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ' என்று எதையும் தெரிவிக்க வேண்டாம். வீண் ஜம்பம் அடிப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.