அதிமுக கவுன்சிலர் ஓட ஓட வெட்டி கொலை.. கடைகள் அடைப்பு.. போலீசார் குவிப்பு... திருத்தணியில் பரபரப்பு
திருவள்ளுர்: திருத்தணி ரோட்டில் அதிமுக கவுன்சிலர் ஆறுமுகத்தை மர்மக் கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி கொலை செய்தால் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி அதிமுக 13வது வார்டு கவுன்சிலர் ஆறுமுகம். இன்று காலை திருத்தணி இந்திரா நகரில் உள்ள அவருடைய வாட்டர் பிளாண்ட்டை பார்வையிட்ட பின்னர் ஸ்கார்பியோ காரில் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது ஆட்டோ ஒன்று அவர் வந்த காரை மடக்கி நின்றது. கத்தியுடன் ஆட்டோவில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் காரின் முன்பக்க கண்ணாடி அடித்து உடைத்துள்ளனர்.
பின்னர் மிளகாய் பொடியை ஆறுமுகத்தின் முகத்தில் தூவி அவரை வெட்டியுள்ளனர். உயிரைக் காத்துக் கொள்ள காரில் இருந்து இறங்கி கவுன்சிலர் ஓடத் தொடங்கினார். அப்போதும் விடாமல் துரத்திய அந்த கும்பல் கவுன்சிலரை ஓட ஓட விரட்டி பின்பக்க மண்டையில் அடித்து வெட்டி சாய்த்தனர். இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆறுமுகத்தின் டிரைவர் பூவரசன் போலீசில் புகார் செய்தார். பின்னர், திருவள்ளுர் எஸ்.பி. சாந்தன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். தனிப்படை அமைத்து கொலை செய்த மர்ம கும்பலை கண்டுபிடிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
காலை நடைபெற்ற இந்தப் படுகொலையால் திருத்தணி பேருந்து நிலையம் அருகே உள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க திருத்தணியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஆறுமுகம் நடைப்பயிற்சி சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று கொலை செய்ய முயற்சி செய்துள்ளது. அது குறித்து அவர் போலீசாரிடம் புகாரும் கொடுத்துள்ளார். என்றாலும் போலீஸ் எந்த பாதுகாப்பையும் அவருக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. கவுன்சிலர் ஆறுமுகம் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்த விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.