எடப்பாடியார், பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!
அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
சென்னை: உள்ளாட்சித் தேர்தல், கட்சி நிர்வாகிகளை புதியதாக நியமிப்பது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
இக்கூட்டம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. அதனால் இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இக்கூட்டம் காலதாமதமாக மாலை தொடங்கியுள்ளது. காலையில் தொடங்க இருந்த கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் சிலர் கலந்துக்கொள்ளவில்லை என்பதால் அப்செட் ஆன அதிமுக தலைமை உடனடியாக அவர்கள் அனைவரையும் கூண்டோடு நீக்கியது.
இதனைத்தொடர்ந்து தற்போது மாலையில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர உள்ளதை அடுத்து, இது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனின் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் சிலர் நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதில் புதிய மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். இதில் பல மாவட்டங்களைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளர்களும் கலந்துகொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
மேலும், அதிமுக அளவில் புதிய மாவட்டங்களைப் பிரித்து, அதற்கு மாவட்டச் செயலாளர்களை நியமிக்கவும் அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. தற்போது 50 இருக்கும் அதிமுக மாவட்டங்களை 70 ஆக பிரிக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.