ராணியை கைவிட்ட முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி...படை, பரிவாரங்களுடன் ஓ.பிஎஸ் அணியில் தஞ்சம்!
முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ்-ன் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
சென்னை : பாலியல் புகாரில் சிக்கி கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்த திருச்சி மாவட்ட முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ளார்.
திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அதிமுகவின் முக்கிய அமைச்சராக வலம் வந்து கொண்டிருந்தார். ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பரஞ்சோதி, திருச்சி மேற்குத் தொகுதியில் திமுகவின் தெற்கு கோட்டை நாயகனான கே.என்.நேருவை தோற்கடித்து வெற்றி பெற்றதால் ஜெயலலிதாவின் அபிமான அமைச்சரானார்.
பரஞ்சோதியின் கொடி ஜெயலலிதாவின் ஆசிர்வாதத்தால் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த நிலையில், திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரில் வசித்து வந்த டாக்டர் ராணி, திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் 2011-ம் ஆண்டு பாலியல் மற்றும் மோசடி புகார் செய்திருந்தார். அந்த புகாரில், "பரஞ்சோதி தன்னை 2-வது மனைவியாக திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு பிறகு ஏமாற்றி பணம், நகைகளை பெற்றுக் கொண்டு மோசடி செய்துவிட்ட தாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்தப் பாலியல் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அமைச்சர் பதவி பறிபோய் கட்சியில் இருந்து பரஞ்சோதி ஓரங்கட்டப்பட்டார். இந்தப் பிரச்னை நடந்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் டாக்டர். ராணி விஷயத்தை சரிகட்டி விட்டு கட்சிப் பதவிக்காக பரஞ்சோதி காத்திருந்துள்ளார்.
கைநழுவி போன பதவி
ஆனால் திருச்சி மாவட்ட துணைச் செயலாளராக இருந்த வளர்மதிக்கு இந்த வாய்ப்பு கிடைத்து அவர் அமைச்சரவையிலும் இடம்பெற்றதால் அதிருப்தியில் இருந்துள்ளார் பரஞ்சோதி. இதே போன்று திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெல்லமண்டி நடராஜனுக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.
தினகரனிடம் முறையீடு
கட்சித் தலைமை தன்னை கண்டுகொள்ளவில்லையே என்ற ஆதங்கத்தில் இருந்துள்ளார் பரஞ்சோதி. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தினகரன் தரப்பை அணுகி தான் ஏற்கனவே போட்டியிட்ட திருச்சி மேற்குப் பகுதியின் மாவட்ட செயலாளர் பதவிக்கு அடிபோட்டுள்ளார்.
பேரம்
ஆனால் தொடர்ந்து தினகரன் தரப்பு அலட்சியப்படுத்தியதால் மன விரக்தியில் இருந்த பரஞ்சோதி, தினகரனின் எதிர் அணியான ஓ.பன்னீர்செல்வம் அணியை தொடர்பு கொண்டு பேரம் பேசியுள்ளார். இதில் பரஞ்சோதிக்கு சாதகமாக பேரம் கூடியதால் காரியத்தை கணக்கச்சிதமாக முடித்துள்ளார்.
ஒன்றுகூடல்
இதன் வெளிப்பாடாகவே முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி இன்று ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ளார். தன்னுடைய ஆதரவாளர்கள் 2 ஆயிரம் பேருடன் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஐக்கியமாகிவிட்டார் பரஞ்சோதி.