தம்பிதுரையை கட்டாயப்படுத்தி கரூருக்கு அனுப்பிய இ.பி.எஸ்... காரணம் என்ன?
சென்னை: கரூர் தொகுதியில் தோல்வியை தழுவிய பிறகு அந்த ஊர் பக்கமே தலைக்காட்டாத தம்பிதுரையை இப்போது மீண்டும் அங்கு அனுப்பி வைத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
சொந்த ஊரான கிருஷ்ணகிரியில் இருந்த தம்பிதுரையை மீண்டும் கரூர் மாவட்டத்திற்கு சென்று உள்ளாட்சித் தேர்தல் பணிகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என இ.பி.எஸ். கேட்டுக்கொண்டாராம்.
கரூரில் தோற்றுப்போனதால் அங்கு சென்று அரசியல் செய்ய முதலில் தயக்கம் காட்டிய தம்பிதுரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று வேறு வழியில்லாமல் மீண்டும் கரூரில் தலைக்காட்டத் தொடங்கியுள்ளார்.
மோடியை காப்பாற்றியதே பால் தாக்கரேதான்.. மறக்க வேண்டாம்.. சிவசேனா கடுமையான விமர்சனம்!
சீனியர் நிர்வாகி
அதிமுகவில் தம்பிதுரையை பொறுத்தவரை மிக முக்கியமான மூத்த நிர்வாகி ஆவார். எம்.ஜி.ஆர். கால அரசியல்வாதியான அவருக்கு ஜெயலலிதா உரிய கவுரவம் அளித்து அவரது பணிகளை பலமுறை பாராட்டியுள்ளார். ஏத்திக்கட்டிய வேஷ்டி, சீவாத தலை, பட்டன் போடாத முழுக்கை சட்டை என எப்போதும் எளிமையாகவே தம்பிதுரையும் காட்சியளிப்பார். ஆனால் அவருக்கு பல நூறு கோடி மதிப்பில் கல்லூரிகள் இருப்பது தனிக்கதை.
கரூர் மாப்பிள்ளை
தம்பிதுரை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெரும்பாலான காலங்கள் கரூரில் தான் அரசியல் செய்துள்ளார். காரணம், அங்கு தான் தனது மாமனார் வீடு உள்ளது. தொடர்ந்து 2 முறை அதாவது 10 ஆண்டுகள் கரூர் தொகுதி எம்.பி.யாக இருந்த அவர், மூன்றாவது முறையாக கடந்த தேர்தலில் போட்டியிட்டு நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
சொந்த ஊரில்
கரூரில் அடைந்த தோல்வி, அதுவும் நான்கரை லட்சம் வாக்குகள் வித்தியாசம் என்பது தம்பிதுரையை உலுக்கியது. இதனால் தனது அரசியல் நடவடிக்கைகளை குறைத்துக்கொண்டு கரூர் பக்கம் தலைக்காட்டாமல் சொந்த ஊரான கிருஷ்ணகிரியிலும், சென்னையிலுமாக வசித்து வந்தார்.
விருப்பமனு
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விருப்பமனு விநியோகத்தை தொடங்கி வைப்பதற்காக, பல மாதங்களுக்கு பிறகு கரூருக்கு தம்பிதுரை வந்ததால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை செந்தில்பாலாஜியை சமாளிக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு பக்கபலமாக இருக்குமாறு தம்பிதுரையிடம் முதல்வர் இ.பி.எஸ். கேட்டுக்கொண்டுள்ளாராம்.