9 தீர்மானங்கள்.. இடைத்தேர்தல் விவாதம்.. முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட அதிமுக செயற்குழு!
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளது.
Recommended Video
சென்னை: அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.
இன்றைக்கு ஒத்திவைப்பு
அ.தி.மு.க. செயற்குழு சென்னையில் 20-ந் தேதி நடக்க இருந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு காரணமாக செயற்குழு ஒத்தி வைக்கப்பட்டது.
எத்தனை பேர் பங்கேற்றனர்
செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 250-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது, கட்சியில் காலியாக இருக்கும் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
இடைத்தேர்தல்
மேலும் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்வது? குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி, மீண்டும் நடந்து விடக்கூடாது என்பதில் அக்கட்சி உறுதியாக உள்ளது.
9 தீர்மானம் நிறைவேற்றம்
அதிமுக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முக்கியமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் அண்ணா மற்றும் பெரியார் ஆகியோருக்கும் பாரத ரத்னா வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.