ஜெ.வுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதிமுக உடைந்து சிதறும்.. சசிகலா புஷ்பா பரபரப்பு பேச்சு
சென்னை: அதிமுகவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நிறைய பேர் உள்ளதாகவும் அவர்களுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார். மேலும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் அதிமுக உடையும் எனவும் சூசகமாக கூறியுள்ளார் சசிகலா புஷ்பா.
நக்கீரன் இதழுக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கேள்வி: அ.தி.மு.க.வில் அண்மைக்காலமாக தொண்டர்களிடம் ஒரு இறுக்கமான சூழல் இருப்பதாகச் சொல்கிறார்களே?
பதில்: கட்சிக்காக உழைச்சவங்களை ஓரங்கட்டிவிட்டு, "பேக்கேஜ் பேசிஸ்'ல கட்சியை நடத்துனா தொண்டர்கள் இறுக்கமாகத்தான் இருப்பாங்க. கட்சியில 80 சதவீதம் பேர் சசிகலா வகையறாக்களைப் பிடிச்சி உள்ளே வந்துடுறாங்க.
ஓபிஎஸ்
நேர்மையா உள்ளே வர்றவங்களால முதல்வரை அணுக முடியலை. பல விதமான குடைச்சல்கள். ஓ.பி.எஸ். அண்ணாச்சி இருக்கார். அவர் மீது கோபம் வந்தது. ஓரங்கட்டினாங்க. ஆனா, டக்குன்னு பிடிக்க வேண்டியவங்கள பிடிச்சாரு மீண்டும் பெரிய ஆளாயிட்டாரு.
நத்தம்
நத்தம் விஸ்வநாதனை வெளியேத்துறாங்க. அப்புறம் முக்கியத்துவம் கிடைக்கும். குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும்தான் இந்த வாய்ப்பு. சசிகலா வகையறாக்களின் ஊழல்கள், அரசியல் தலையீடுகள் நிறைய இருக்கு. முதல்வர் இதை ரிவியூ பண்ணணும்.
அதிருப்தி எம்எல்ஏக்கள்
கேள்வி: ஆளுங்கட்சியில் அதிருப்தியாக உள்ள எம்.எல்.ஏ.க்களை வைத்து அ.தி.மு.க.வை உடைக்க திட்டமிடுகிறீர்களாமே?
பதில்: உடையுமா? உடைக்கப்படுமாங்கிறதெல்லாம் எனக்குத் தெரியாது. அந்த வேலையும் எனக்கு தெரியாது. ஆனா, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் நிறைய அதிருப்திகள் இருக்கு. அப்படிப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பலரும் என்னிடம் பேசிக்கிட்டுத்தான் இருக்காங்க.
வரலாறு பேசும்
கோர்ட் ஜட்ஜ்மெண்ட் வரும்போது, அம்மாவுக்கு எதிரா தீர்ப்பு வந்துட்டா சின்னம்மா கும்பலிடம் கட்சி போய்டுமே, அப்படிப்போனா அவ்வளவுதான்னு ஆதங்கத்துல நிறைய பேர் இருக்காங்க. அதனால, பொறுத்திருந்து பாருங்க, வரலாறு பேசும்.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.