ஹைகோர்ட்டிலும் நாறிப்போன அதிமுக மோதல்... நீதிபதி முன்பு வக்கீல்கள் குடுமிப்பிடி சண்டை!
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜராவதில் அதிமுக வழிக்கறிஞர்களிடையே நீதிபதி முன்னிலையிலேயே குடுமிப்பிடி சண்டை நடந்தது.
சென்னை : தேர்தல் ஆணைய நோட்டீஸை எதிர்த்து அதிமுக தொடர்ந்த வழக்கு விசாரணையில் எந்த அணியின் வழக்கறிஞர் ஆஜராவது என்று நீதிபதி முன்னிலையிலேயே இரண்டு கோஷ்டியினரும் குடுமிப்பிடி சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவையில் போலி வாக்காளர்களை சேர்த்த குற்றச்சாட்டு தொடர்பாக அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து கடந்த 2004ம் ஆண்டு அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தேர்தல் ஆணையத்தை எதிர்த்து அப்போது அதிமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையைத் தாண்டி வழக்கறிஞர்களின் வாக்குவாதம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக அம்மா அணியான சசிகலா கோஷ்டியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியான ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டியும் தாங்கள் தான் உண்மையான அதிமுக என்று வெளி அரங்குகளில் சண்டை போட்டு வருகின்றனர். இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையிலேயே இரு கோஷ்டி வழக்கறிஞர்களும் தாங்கள் தான் வழக்கு விசாரணைக்கு ஆஜராக உரிமை உள்ளதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கு விசாரணையின் போது கடுமையான வாக்குவாதங்களை சந்தித்த நீதிபதியும், நீதிமன்றமும் இரு கோஷ்டியில் யார் விசாரணைக்கு ஆஜராவது என்று போட்ட போட்டியால் அதிமுகவின் புகழ் சட்ட அரங்கிலும் நாறிக்கிடக்கிறது. இருவரும் யார் விசாரணைக்கு ஆஜராவது என்பதற்கு முடிவு எட்டப்படாமல் வழக்கறிஞர்களின் வாக்குவாதம் நீடித்தத்தால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.