சபாஷ் சரியான போட்டி... மு.க.ஸ்டாலினுடன் மல்லுக்கட்ட வருகிறார் ஜேசிடி பிரபாகர்!
சென்னை: வில்லிவாக்கம் தொகுதியின் ராஜாவா வலம் வந்தவரான ஜேசிடி பிரபாகர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் உள்ள வெகு அரிதான அடக்கமான பிரமுகர்களில் பிரபாகரும் ஒருவர். திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர் வில்லிவாக்கத்தில் நீண்ட காலமாக கோலோச்சி வந்தவர்
அரசியல்வாதி என்ற முகத்துடன் விளையாட்டு ஆர்வலராகவும் வலம் வருபவர். இப்போது கொளத்தூரில் மிக மிக வலிமையான ஸ்டாலினுக்கு எதிராக களம் இறக்கப்பட்டுள்ளார் பிரபாகர்.
எம்.ஜி.ஆர். காலத்து பிரமுகர்
எம்.ஜி.ஆர் காலத்து அதிமுக பிரமுகர் பிரபாகர். கடந்த 1980ம் ஆண்டு முதல் முறையாக வில்லிவாக்கம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பிரபாகர்.
84ல் தோல்வி
1984ல் நடந்த தேர்தலில் மீண்டும் வில்லிவாக்கத்தில் போட்டியிட்டு தோல்வியுற்றார் பிரபாகர்.
2011ல்
அதன் பின்னர் மீண்டும் 2011ல் ஜெயலலிதா அவரை வில்லிவாக்கம் தொகுதியில் நிறுத்தினார். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார் பிரபாகர்.
விளையாட்டிலும்
அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் தொழிலதிபராக, தமிழ்நாடு செஸ் சங்கத் துணைத் தலைவர், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க துணைத் தலைவராக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிதித்துறை துணைக் கமிட்டியின் தலைவராக என பல அவதாரம் பூண்டுள்ளவர் பிரபாகர்.
ஜெயலலிதாவின் குட்புக்கில்
நீண்ட காலமாக ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பெற்றுள்ள அரிதான அரசியல்வாதி பிரபாகர். இந்த நிலையில் அவரை வலிமையான ஸ்டாலினுக்கு எதிராக களம் இறக்கி விட்டுள்ளார் ஜெயலலிதா.
சரியான போட்டி
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வலிமையான வேட்பாளரை ஜெயலலிதா நிறுத்தியுள்ளதன் மூலம் கொளத்தூரில் போட்டி கடுமையாகியுள்ளதாக கருதப்படுகிறது. பிரபாகருக்கு எதிராக குற்றம் சாட்ட பெரிய அளவில் பிரச்சினைகள் இல்லை என்பது திமுகவினருக்கு பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.