திமுக பாணியை பின்பற்றும் அதிமுக... நிர்வாகிகளுக்கு சுதந்திரம் கொடுத்த ஓ.பி.எஸ்.
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று முதல் மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகின்றனர்.
இந்த சந்திப்பு கூட்டத்தில் பகுதி, ஒன்றிய நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர்கள் மீது சரமாரியாக புகார் தெரிவித்து வருகின்றனர். திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனான சந்திப்பு நேற்றிரவு நடைபெற்ற போது, திருச்சி மாவட்ட ஆவின் சேர்மனும், அதிமுக மாணவரணி நிர்வாகியுமான கார்த்திகேயன் மீது சரமாரி குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் என பலர் மீதும் அடிமட்ட நிர்வாகிகள் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர். இதனை ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் மிகவும் சீரியஸாக குறிப்பெடுத்துள்ளனர்.
கட்சியின் வேராக இருக்கக் கூடிய அடிமட்ட நிர்வாகிகள் இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை நேற்று தான் அதிமுக தலைமை உணர்ந்துள்ளது. பொதுவாக இப்படி மனம் விட்டு பேசக்கூடிய வகையில் அதிமுகவில் இதுவரை இப்படி ஒரு கூட்டம் நடத்தப்பட்டதில்லை. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பொதுக்குழு கூட்டம் என்று தான் நடக்கும், முதல்முறையாக மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடனான சந்திப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இது வரும் 13-ம் தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது.
பொதுவாக திமுக பொதுக்குழு, நிர்வாகிகள் கூட்டத்தில் தான் சலசலப்புகள் அதிகம் இருக்கும். மாவட்டச் செயலாளர்கள் மீது ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் குற்றம் குறைகளை கூறுவர். அதிமுகவை பொறுத்தவரை யாரும் வாய் திறக்காத வகையில் பெயருக்கு கூட்டம் நடத்தப்படும். ஆனால் அந்த நடைமுறை மாற்றப்பட்டு நிர்வாகிகள் பேசுவதற்கு சுதந்திரம் கொடுத்துள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். இதை இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி கூட விரும்பவில்லையாம். ஆனால் அடிமட்ட நிர்வாகிகளின் மனதில் உள்ளதை தெரிந்துகொண்டால் தான் கட்சியை சரியான திசைக்கு கொண்டு செல்ல முடியும் என நினைக்கிறாராம் ஓ.பி.எஸ்.
இதனிடையே அதிமுகவின் சில வழக்கங்களை திமுக பின் தொடர்வதும், திமுகவின் சில வழக்கங்களை அதிமுக பின் தொடர்வதும் இப்போது சகஜமாகிவிட்டது.