அடுத்தது ராஜினாமா நாடகம்... முந்துவது தம்பிதுரையா? உதயகுமாரா?
சசிகலா முதல்வர் பதவி ஏற்க வலியுறுத்தி அதிமுகவில் 'ராஜினாமா' நாடகங்கள் நடக்கலாம். அனேகமாக தம்பிதுரை அல்லது உதயகுமார் இந்த ராஜினாமா நாடகத்தை தொடங்கி வைக்கக் கூடும்.
சென்னை: சசிகலாதான் முதல்வராகப் போகிறார் என அதிமுக நிர்வாகிகள் திடமாக நம்புகின்றனர். இந்த நிலையில் சசிகலா முதல்வராக வலியுறுத்தி அமைச்சர் பதவி, எம்பி பதவியை ராஜினாமா செய்யும் நாடகம் எப்போதுவேண்டுமானாலும் அரங்கேறும் நிலை உள்ளது.
அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கைப்பற்ற வியூகம் வகுத்தார். இதற்காக போயஸ் கார்டனில் மாவட்ட நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டு நாடகங்கள் நடந்தேறின. அதிமுக மூத்த தலைவர்கள் ஊடகங்களில் சின்னம்மாதான் அடுத்த பொதுச்செயலர் என கூப்பாடு போட்டனர்.
இப்போது ஒருவழியாக அதிமுக பொதுச்செயலராகிவிட்டார் சசிகலா. அடுத்ததாக முதல்வர் நாற்காலியை கைப்பற்றப் போகிறார்கள். இதற்காகவே அமைச்சர்கள், எம்பிக்கள் இனி சசிகலாவே முதல்வர் என்ற குரலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அடுத்ததாக சசிகலா முதல்வர் பதவி ஏற்க வலியுறுத்தி இதோ ராஜினாமா செய்யப் போகிறோம் என அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் களமிறங்க போகிறார்கள். இந்த நாடகத்துக்கு பிள்ளையார் சுழிபோடுவது அனேகமாக தம்பிதுரையாகவோ அமைச்சர் உதயகுமாராகவோ இருக்கலாம் என தெரிகிறது.
இந்த இருவருக்குமே முதல்வர் பன்னீர்செல்வம் வேண்டாதவர்; பன்னீர்செல்வத்தின் மீது கடும் அதிருப்தியில் இருப்பவர்கள் இருவரும்... ஆகையால் இந்த இருவரில்தான் ராஜினாமா நாடகத்தை தொடங்கி வைப்பார்கள் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.