கிராம மக்களுடன் சென்று அமைச்சர் சம்பத் வீட்டை முற்றுகையிட்ட அதிமுக நிர்வாகி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புலவனூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். அதிமுகவைச் சேர்ந்தவர். ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். அவர் மீது புதுப்பேட்டை காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் வெங்கடேசன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பண்ருட்டி அருகே சென்னை சாலையில், திருமலை நகரில் உள்ள அமைச்சர் சம்பத் வீட்டை திடீர் என முற்றுகையிட்டனர்.
வெங்கடேசன் மீது தொடர்ந்து போலீசார் பொய் வழக்கு போடுவதை கண்டித்தும், புதுப்பேட்டை போலீசார் மீது உடனே துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் சம்பத்தை வலியுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து ஆர்பாட்டம் செய்த மக்களை அழைத்து சம்பத் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்த பிரச்சனைக்கு உடனே தீர்வு காண்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். இதைனையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.