பேரனுக்கு தடுப்பூசி போட மதுரை வந்த அதிமுக நிர்வாகி, மனைவி கார் விபத்தில் பலி
மதுரை: உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் அதிமுக நிர்வாகி ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி ஜெயா சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களின் பேரனான 6 மாத கைக்குழந்தை காயங்களுடன் தப்பியது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அதிமுக நிர்வாகி. அவரது மனைவி ஜெயா. அவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ராஜேந்திரனும், ஜெயாவும் மகள் வழிப்பேரனான 6 மாத குழந்தை வீரேஷுக்கு தடுப்பூசி போட நேற்று மதுரைக்கு காரில் கிளம்பினர்.
காரை ராஜேந்திரன் ஓட்டினார். மதுரையில் வீரேஷுக்கு தடுப்பூசி போட்ட பிறகு அவர்கள் மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பார்க்க சென்றனர். திருக்கல்யாணத்தை பார்த்துவிட்டு அவர்கள் காரில் ஊருக்கு திரும்பினர்.
கருமாத்தூர் அருகே வந்தபோது ராஜேந்திரனின் காரும், போடியில் இருந்து மதுரை நோக்கி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இதில் ராஜேந்திரனும், ஜெயாவும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
குழந்தை வீரேஷ் சிறுகாயங்களுடன் உயிர் பிழைத்துக் கொண்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து ராஜேந்திரன், ஜெயா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை வீரேஷ் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.