அதிமுகவுடன் இவர்கள் கை கோர்க்கலாம்.. ஆனால் போட்டியிட்ட்டால் அது "இலை"யில்தான்!
சென்னை: கூட்டணி இல்லை தனித்துப் போட்டி என்பது போல அதிமுகவினர் பில்டப் செய்து வந்தாலும் கூட அவர்களும் கூட சில குட்டிக் கட்சிகளுடன் ரகசியமகா பேசித்தான் வருகிறார்கள். தொகுதிப் பங்கீட்டையும் சத்தம் போடாமல் முடித்து வருகிறார்களாம்.
சில பல குட்டிக் கட்சிகளை உள்ளே கொண்டு வந்து கூட்டணியாக காட்டி அதேசமயம், அவர்களையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான கூட்டியை அதிமுகவும் உருவாக்கி வருகிறதாம்.
இருப்பினும் இதை பட்டவர்த்தனமாக செய்யாமல் ரகசியமாக செய்து வருகிறார்களாம். குட்டிக் கட்சிகளுடன் கிட்டத்தட்ட தொகுதிப் பங்கீடும் கூட முடிவடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஜான் பாண்டியன்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி நடத்தி வருபவர் ஜான் பாண்டியன். இவரையும் தனது கூட்டணிக்குள் இழுத்து விட்டுள்ளது அதிமுக.
நத்தம் விஸ்வநாதன் மூலம் பேச்சு
சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை தனது குடும்பத்தோடு சந்தித்த ஜான் பாண்டியன் திருச்சியில் ஒரு மாநாட்டையும் நடத்தினார். அதில் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்டார். அந்த சமயத்தில் கூட்டணி குறித்துப் பேசியதாக தெரிகிறது.
பண்ருட்டி வேல்முருகன்
அதேபோல தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அப்போதே கூட்டணி தொடர்பாக பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது.
கொங்கு நாடு ஈஸ்வரன்
அதேபோல கொங்கு பகுதியில் செல்வாக்கு மிக்கவரான ஈஸ்வரனையும் அதிமுக பக்கம் கொண்டு வரவுள்ளனர். இவரும் வந்தால் இவரது கட்சிக்கும் சீட் தரப்படலாம்.
செ.கு. தமிழரசன்
இதுதவிர தலித் தலைவர் செ. கு. தமிழரசன் நீண்ட காலமாகவே அதிமுகவுடன்தான் இருந்து வருகிறார். அவரது கட்சிக்கும் ஒரு சீட் தரப்படும். அவரும் இரட்டை இலையில்தான் போட்டியிடுவார்.
ஜி.கே.வாசன்
அதேபோல ஜி.கே.வாசன் நடத்தி வரும் தமிழ் மாநில காங்கிரஸையும் கடைசி நேரத்தில் அதிமுக தனது கூட்டணிக்குள் இழுக்கலாம். இப்போதைக்கு அறிகுறி இல்லாவிட்டாலும் கூட ரகசியமாக பேச்சு நடப்பதாகவே சொல்லப்படுகிறது.
கம்யூனிஸ்டுகள்
கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை ஆளுக்கு ஒரு கூட்டணி இரு கட்சிகளும் போனதில்லை. எங்கு போனாலும் இந்திய கம்யூனிஸ்ட்டும், மார்க்சிஸ்ட்டும் சேர்ந்தேதான் போவார்கள். தற்போதைக்கு அதிமுக மீது மார்க்சிஸ்ட்டுக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை. இருப்பினும் மார்க்சிஸ்ட்டையும் வழிக்குக் கொண்டு வந்து இரு கம்யூனிஸ்டுகளையும் உள்ளே இழுக்கவும் அதிமுக முயற்சிப்பதாக தெரிகிறது.
சின்னம் இரட்டை இலைதான்
ஒரு வேளை குட்டிக் கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டாலும் கூட அவர்களை இரட்டை இலையில்தான் போட்டியிட வைப்பார் ஜெயலலிதா என்றும் தெரிகிறது.
சின்னச் சினனதாக
பெரிய பெரிய மீன்களுக்காக தேவுடு காத்தது போதும் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ குட்டி குட்டிக் கட்சிகளாக சேர்த்து அவர்கள் வேறு பக்கம் போய் விடாமல் தடுக்கப் பார்த்து வருகிறது அதிமுக.