சென்னை, வடக்கு, மேற்கு மண்டலங்களில் அதிமுகவுக்கு அதிக ஆதரவு: புதிய தலைமுறை சர்வே
சென்னை: தமிழகத்தின் சென்னை, வடக்கு, மேற்கு மண்டலங்களில் அதிமுகவுக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறுகிறது புதிய தலைமுறையின் கருத்து கணிப்பு.
புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் ஆப்ட் நிறுவனம் இணைந்து தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? கட்சிகளின் செல்வாக்கு என்ன? என்பது குறித்து விரிவான கருத்து கணிப்பை நடத்தின. கடந்த ஜனவரி 22-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை சுமார் 5,018 பேரிடம் இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் 234 தொகுதிகளையும் 5 மண்டலங்களாக பிரித்து அப்பகுதிகளில் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கு எவ்வளவு என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை தனி மண்டலமாகவும் இதர வட மாவட்டங்களை உள்ளடக்கி வடக்கு மண்டலமாகவும் திண்டுக்கல் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்த்து மத்திய மண்டலமாகவும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தை மேற்கு மண்டலமாகவும் திண்டுக்கல் தவிர்த்த இதர தென்மாவட்டங்களை தெற்கு மண்டலமாகவும் பிரித்து இக்கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
இதில் சென்னை, வடக்கு, மேற்கு மண்டலங்களில் அதிமுகவுக்கு அதிக ஆதரவு கிடைத்திருக்கிறது என்கிறது கருத்து கணிப்பு.
சென்னை மண்டலம்:
அதிமுக - 28.16%; திமுக- 24.55%; தேமுதிக- 7.35%; மதிமுக- 3.68%; பாமக- 2.91%; காங்கிரஸ்- 2.77%; பாஜக - 2.50%
வடக்கு மண்டலம்
அதிமுக - 37.54%; திமுக- 35.32%; பாமக- 7.95%; தேமுதிக- 4.80%; காங்கிரஸ்- 1.99%; பாஜக- 1.99%; மதிமுக- 1.05%
மேற்கு மண்டலம்
அதிமுக - 28.16%; திமுக- 24.55%; தேமுதிக- 7.35%; மதிமுக- 3.68%; பாமக- 2.91%; காங்கிரஸ்- 2.77%; பாஜக - 2.50 %
சபாஷ் குணசேகரன்
இந்த கருத்து கணிப்புகளை முன்வைத்து புதிய தலைமுறை நிகழ்ச்சி நேற்று 2 மணிநேரம் நேர்படசு நிகழ்ச்சியை நடத்தியது. வழக்கமாக 1 மணிநேரம்தான் இந்த நிகழ்ச்சி.
இதில் அதிமுக ஆதரவு மாஃபா பாண்டியராஜன், திமுகவின் கண்ணதாசன், பாமகவின் கே. பாலு, காங்கிரஸின் கோபண்ணா, பாஜகவின் வானதி சீனிவாசன் பங்கேற்றனர். புதிய தலைமுறையின் கருத்து கணிப்புகள் திமுக, அதிமுகவை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் தந்துள்ளதை அதன் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினர்.
அதுவும் பாமகவின் பாலு சீற்றத்துடனேயே கருத்துகளை முன்வைத்தார். அதேபோல் காங்கிரஸின் கோபண்ணாவும் கருத்து கணிப்பு முடிவுகள் பொய்யாகித்தான் போகும் என அடித்து சொன்னார்.
ஆனாலும் இத்தனை கடும் எதிர்ப்பு குரல்களையும் வழக்கம்போல புன்னகையோடு எதிர்கொண்டு உடனுக்குடன் அந்த எதிர்வாதங்களை முன்வைப்போர் வாயடைத்து போகும் அளவுக்கு தரவுகளையும் நிகழ்வுகளையும் நினைவுகளில் இருந்து அடுக்கிக் கொண்டே போனார் நெறியாளரான மூத்த பத்திரிகையாளர் மு. குணசேகரன்.
கருத்து கணிப்பு நடத்திய முறை குறித்து கேள்வி எழுப்பிய போதெல்லாம் இது அறிவியல்பூர்வமான கருத்து கணிப்பே என்பதை ஆணித்தரமாக வாதிட்டார் குணசேகரன்... இந்த அணுகுமுறையால் புதிய தலைமுறையின் கருத்து கணிப்புக்கு எதிரான எதிர்ப்பு குரல்கள் அனைத்தும் நேற்றைய நேர்பட பேசுவில் தகர்ந்து போனது.
வெல்டன் குணசேகரன்!!