நாளை அதிமுக பொதுக்குழு.. சசி ஆதரவாளர்கள் "சவுண்டு" விட்டால்... பரபர ஏற்பாடுகள்!
சென்னை: அதிமுக அம்மா அணியின் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ' பொதுக்குழு உறுப்பினர்களில் யாரெல்லாம் சசிகலா ஆதரவாளர் என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் கூட்டத்தை நடத்தி முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார் முதல்வர் என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
சென்னை, வானகரத்தில் நாளை காலை பொதுக் குழு கூட்டத்தைக் கூட்டுகிறார் முதல்வர் பழனிசாமி. இந்தக் கூட்டத்தில், கட்சிக்கு வழிகாட்டும் குழுவை அமைப்பது; சசிகலாவை நீக்குவது உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றது.
மாநிலம் முழுவதும் உள்ள கட்சியின் 2,300 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் சசிகலா ஆதரவு உறுப்பினர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பலாம் என்ற தகவலும் உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து முதல்வர் கவனத்துக்குச் சென்றிருக்கிறது.
டிஜிபியுடன் ஆலோசனை
இதையடுத்து, இன்று டிஜிபி ராஜேந்திரனிடம் விரிவான ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர். இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆளும்கட்சி முன்னணி நிர்வாகி ஒருவர், "பொதுக்குழுவில் சசிகலா ஆதரவாளர்கள் பங்கேற்றாலும், கூட்டம் முடியும் வரையில் அவர்கள் அமைதியாகத்தான் இருப்பார்கள்.
சவுண்டு வந்தா அவ்வளவுதான்
எதிர்க்குரல் எழுப்பினால், அவர்களை அடக்கும் வகையில் பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக்குழு உறுப்பினர்களின் பெயர், புகைப்படம், முகவரி ஆகியவை அடங்கிய பட்டியல் காவல்துறை அதிகாரிகள் வசம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
குண்டுக்கட்டாக தூக்கி வீசப்படுவார்கள்
மண்டபத்துக்குள் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் இருந்தாலும், சஃபாரி உடையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பவுன்சர்களை நிறுத்தவும் முடிவு செய்துள்ளனர். பிரச்னை வரக் கூடிய பகுதிகளில் இந்த பவுன்சர்கள் நின்று கொண்டிருப்பார்கள். யாராவது குரல் எழுப்பினால், குண்டுக்கட்டாக தூக்கி வெளியில் போடும் வேலைகளில் இவர்கள் ஈடுபடுவார்கள்.
சலசலப்பே இருக்கக் கூடாது
கூட்டம் முடியும் வரையில் எந்தவித சலசலப்பும் இல்லாமல் நடக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என விவரித்தவர், பொதுக்குழுவுக்கு எதிராக வெற்றிவேல் போட்ட வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது. இதையடுத்து, மேல்முறையீடு என அவர்கள் கிளம்பினாலும் பொதுக்குழு நடப்பதை யாராலும் தடுக்க முடியாது. குழுவின் தீர்மானங்களை தேர்தல் ஆணையத்தில் அளித்து, இரட்டை இலையைப் பெறும் முடிவில் இருக்கிறார் முதல்வர். அப்போதுதான் உள்ளாட்சித் தேர்தலை வலுவாக எதிர்கொள்ள முடியும். பதவியில்லாத நிர்வாகிகளுக்கு உள்ளாட்சிப் பதவிகளை வாரிக் கொடுக்க முடியும்.
இந்த ஒரு காரணத்தை வைத்தே
இந்த ஒரு காரணத்தை முன்வைத்தே பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களை வளைத்துவிட்டது எடப்பாடி-ஓபிஎஸ் அணி. கட்சியில் தங்களுக்கான பிடி இல்லாமல் போகலாம் என்பதை உணர்ந்துதான், மைசூருக்கு எம்.எல்.ஏக்களை அழைத்துச் சென்றிருக்கிறார் தினகரன். அவர்களில் சிலர் எங்கள் பக்கம் வருவதற்குத் துடிக்கின்றனர். ஜக்கையன் போன்று மற்றவர்களும் மனம் மாறிவிடலாம் எனப் பயந்து, மைசூருக்குக் கூட்டிப் போயிருக்கிறார் தினகரன். இன்னும் சில எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் இருந்து, எங்கள் அணிக்கு வர இருக்கிறார்கள். அதற்கேற்ப வியூகங்களை வகுத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி" என்றார் விரிவாக.