அதிமுக எம்எல்ஏக்களை தக்க வைக்க கையெழுத்து வேட்டை?
சென்னை: முதல்வர் எடப்பாடி - ஓபிஎஸ் தரப்பில் உள்ள எம்எல்ஏக்கள், தினகரன் அணிக்குப் போய் விடாமல் தடுக்க புதிய நடவடிக்கை ஒன்றில் ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது தம்மிடம் உள்ள எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கடிதம் பெறுவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. எடப்பாடிக்கு கொடுத்து வந்த ஆதரவை 19 எம்.எல்.ஏ.க்கள் திரும்பபெற்றுள்ள நிலையில் அவருக்கான ஆதரவு 103 ஆக குறைந்துவிட்டது.
எடப்பாடியிடம் இருக்கும் 103 எம்.எல்.ஏ.க்களில் பலர் எங்களின் ஸ்லீப்பர் செல்களாக இருக்கிறார்கள் என தினகரனும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் சொல்லி வருவதால், எம்.எல்.ஏ.க்களின் மனநிலையை அறிந்துகொள்ள, எனது தலைமையிலான அரசுக்கு உங்களின் ஆதரவு அவசியம். உங்களின் ஆதரவு எனக்கு இருக்கிறதா? என பதில் சொல்லவும் என்ற ரீதியில் எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறார்களாம்.
இருப்பினும் இது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை. நாளை சென்னைக்கு வரவழைக்கப்படும் எம்எல்ஏக்களிடம் முதல்வர் இதுகுறித்தும் பேசலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.