தொழிலாளர் நல வாரியங்கள் அனைத்தையும் முடக்கியது அ.தி.மு.க. அரசு... கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை : தொழிலாளர் நல வாரியங்கள் அனைத்தும் முறையாகச் செயலாற்ற அனுமதிக்காமல் அ.தி.மு.க. ஆட்சி முடக்கி வைத்து விட்டதாக தி.மு.க தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய தொழிலாளர் நல வாரியக் கூட்டங்களே அ.தி.மு.க. அரசில் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
கழக ஆட்சியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக நடைபெற்ற பல்வேறு சிறப்பான பணிகள் மீண்டும் தொடர தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து புதிய விடியலை நோக்கிப் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
தொழிற்சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளை ஏற்று தொழிலாளர்களுக்கு வழங்கிய வாரிய அட்டைகளில் இடம் பெற்றிருந்த என்னுடைய படத்தை மாற்றி, "உழைப்பாளர் சிலை" படத்துடன் வாரிய அட்டைகளை வழங்கிட கழக ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. ஆனால் தற்போது தொழிலாளர்களின் எதிர்ப்புகளை மீறி "உழைப்பாளர் சிலை" மாற்றப்பட்டு, ஜெயலலிதாவின் படம் போட்டு அந்த அட்டைகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உலகம் போற்றும் உழைப்பவர் மேன்மை, ஜெயலலிதா ஆட்சியில் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது.
தி.மு. கழக ஆட்சியில் கட்டுமானத் தொழிலாளர்கள் பயிற்சி பெற செங்கற்பட்டில் "கட்டுமான உயர் பயிலகம்" ஒன்று தொடங்கப்பட்டது. தற்போது அதை நடைமுறைப்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பது அ.தி.மு.க. ஆட்சி.
கட்டுமானம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்களுக்காகப் பணியாற்றி வந்த திரு. பொன்குமார் அவர்களை, கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவராக நியமனம் செய்தது தி.மு. கழக அரசு.
மேலும் அனைத்து வாரியங்களுக்கும் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப் பட்டு முறையாக வாரியக் கூட்டங்கள் நடைபெற்றது தி.மு. கழக ஆட்சியில். ஆனால் தற்போது எந்த வாரியத்திற்கும் தலைவர் நியமனம் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய வாரியக் கூட்டங்களே அ.தி.மு.க. அரசில் நடைபெறவில்லை. அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்கள் அனைத்தும் முறையாகச் செயலாற்ற அனுமதிக்காமல் அ.தி.மு.க. ஆட்சி முடக்கி வைத்து விட்டது.
வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்ற பொன்குமார் முயற்சியால் அனைத்து மாவட்ட நல வாரிய அலுவலகங்களிலும் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் அமர்ந்து பணியாற்ற தி.மு. கழக ஆட்சியில் வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அதிமுக ஆட்சியில் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கான அறையே காலி செய்யப்பட்டு விட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் அமைப்பு சாராத் தொழிலாளர் பல இலட்சம் பேருக்கான நலத் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு, தொழிலாளர்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் அலட்சியப் படுத்தப்பட்டுள்ளனர். மொத்தத்தில் தொழிலாளர் விரோத ஆட்சி தமிழகத்திலே நடைபெறுகிறது. இந்த நிலையை மாற்றினால் தான், தொழிலாளர்களுக்கான நல வாழ்வு உறுதியாகும் என்பதை உணர்ந்து அனைத்துப் பிரிவினரும் உழைத்திட வேண்டும்.
தர்மபுரியில் 12ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் இந்தக் கருத்துகள் எல்லாம் எடுத்து வைக்கப்பட்டு, புத்தெழுச்சி உருவாக்கப்படுமென்று நம்புகிறேன். மாநாடு சிறப்பாகவும், பயனுள்ள முறையிலும் நடைபெற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழக உடன்பிறப்புகள் இந்த மாநாட்டில் பெருவாரியாகக் கலந்து கொண்டு அதன் வெற்றிக்காக உழைத்திட வேண்டுமென்று விரும்புகிறேன்.
கழக ஆட்சியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக நடைபெற்ற பல்வேறு சிறப்பான பணிகள் மீண்டும் தொடர தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து புதிய விடியலை நோக்கிப் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.