ஜெயலலிதா பிறந்தநாளில் 500 மதுக்கடைகள் மூடல்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. எடப்பாடி அரசின் திட்டம்
ஜெயலலிதா பிறந்தநாளில் 500 மதுக்கடைகள் மூட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி அன்று 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின் போது அனைத்து கட்சிகளுமே படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி அளித்தன. அதேபோல ஜெயலலிதா தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததும் 500 மதுக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த உத்தரவிடப்பட்டதன் பேரில், நெடுஞ்சாலைகளுக்கு 500 மீட்டர் அருகில் இருந்த 3,320 மதுக்கடைகள் மூடப்பட்டன.
இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் எண்ணிக்கை 2,830 ஆக குறைந்தது. பின்னர் அரசு உத்தரவின் பேரில், மதுக்கடைகள் திறக்க ஏதுவாக சாலைகளின் பெயர்மாற்றம் நடந்தது.
மேலும் நெடுஞ்சாலை ஓர மதுக்கடைகள் பற்றி உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்தது. இதையடுத்து மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகத்தில் 5 ஆயிரம் மதுக்கடைகள் உள்ளன.
இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்பட்ட மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில், அடுத்தகட்டமாக 500 மதுக்கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதி அன்று 500 மதுக்கடைகள் மூடப்படும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெறவும், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு முடிவு திட்டமிட்டு உள்ளது.
மூடப்படும் 500 கடைகளுக்கான பட்டியலை தயாரிக்க அனைத்து மாவட்ட டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் பட்டியல் கிடைத்ததும் ஜெயலலிதா பிறந்தநாள் அறிவிப்பாக இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.