அதிமுக தலைமைக்கழகம் எங்கள் சொத்து.. எப்போது வேண்டுமானாலும் செல்வேன்.. டிடிவி தினகரன்!
அதிமுக தலைமைக்கழகம் எங்கள் வீடு போன்றது எப்போது வேண்டுமானாலும் செல்வேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுக தலைமைக்கழகம் எங்கள் வீடு போன்றது எப்போது வேண்டுமானாலும் செல்வேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் தனது அணிக்கு இன்று புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் டிடிவி தினகரன் சுற்றுப்பயணத்தையும் அறிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனது இல்லத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இரு அணிகளும் இணைய கொடுத்த கெடு முடிவடைவதால் எப்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
எங்கள் சொத்து
அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன் அதிமுக தலைமைக்கழகம் எங்கள் சொத்து, அதிமுக தலைமை அலுவலகம் எங்கள் வீடு போன்றது, எங்களுக்கு கோவில்போன்றது ஆகையால் எப்போது வேண்டமானாலும் தலைமைக் கழகத்திற்கு செல்வேன் என்றும் கூறினார்.
காவல்துறைக்கு அதிகாரமில்லை
தான் தலைமைக் கழகத்திற்கு செல்வதை தடுக்க எந்த காவல்துறைக்கும் அதிகாரமில்லை என்றார். மேலும் எந்த சட்டத்திலும் அதற்கு இடமில்லை என்றும் அவர் கூறினார்.
எதிரிகளால்ஆபத்து
எதிரிகளால் தலைமைக் கழகத்திற்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தலைமைக் கழகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். சட்டத்திற்கு புறம்பாக காவல்துறையினர் செயல்பட மாட்டார்கள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
என் தலைமையில்தான் கட்சி
அணிகள் இணைப்புக்கு 60 நாட்கள் கால அவகாசம் அளித்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் டிடிவி தினகரன் கூறினார். அணிகள் இணைந்தால் கூட தன்னுடைய தலைமையில்தான் கட்சி செயல்படும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.