விவாதங்களில் பங்கேற்பவர்களின் கருத்து கட்சியின் கருத்து இல்லைங்கோ... ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை!
அதிமுகவின் பெயரை பயன்படுத்தி ஊடகங்களில் சிலர் கூறுவது கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்
Recommended Video
சென்னை : அதிமுக என்ற அடையாளத்துடன் ஊடகங்களில் சிலர் கூறுவது கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என்று அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதிமுக சார்பில் கருத்து கூற யாரும் நியமிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இன்று கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது : அதிமுக சார்பில் நாளிதழ் மற்றும், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து சமூகத் தொடர்பு ஊடகங்களிலும் சிலர் விவாதங்களில் பங்கேற்கின்றனர். கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்துகளை எடுத்துரைக்க புயித செய்தித் தொடர்பாளர்கள் குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது.
இந்தக் குழுவில் இடம்பெறுபவர்கள் மட்டுமே அரசியல், சமூக பொருளாதார விவகாரங்கள் குறித்த கழகத்தின் நிலைப்பாடுகளை எடுத்துக் கூறுவார்கள் என்று கடந்த நவம்பர் 28ம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிமுக ஆதரவாளர்கள், கழகதின் தோழமைகக் கட்சியினர் என்பது போன்ற அடையாளங்களை கூறிக்கொண்டு சிலர் ஊடகங்களில் கூறிவரும் கருத்துகள் கழகத்தின் அதிகாரப்பூர்வ கருத்துகள் அல்ல.
அப்படியான ஒரு அடையாளத்தை கூறிக்கொண்டு தங்கள் கருத்துகளை கட்சியின் கொள்கை நிலைப்பாடாக எடுத்துக்கூற எந்த ஒரு நபருக்கும் அனுமதியோ, ஒப்புதலோ தரப்படவில்லை. எனவே அதிமுக சார்பில் யாரும் நியமிக்கப்படவில்லை என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.