அதிமுகவினர் உண்ணாவிரதம் நிறைவு... பழரசம் குடித்து முடித்து வைத்தனர் ஓபிஎஸ், ஈபிஎஸ்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுகவினர் மேற்கொண்ட உண்ணாவிரதம் நிறைவு பெற்றுள்ளது.
சென்னை : மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் முடிந்துள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம் இருந்த முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பழரசம் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்தனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியிலும், போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் மார்ச் 29க்குள் காவிரி வாரியம் அமைக்கப்படாத நிலையில் அதிமுக சார்பில் இன்று தமிழக முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. முதலில் இந்த உண்ணாவிரதத்தில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியானது.
ஏனெனில் அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் யார் தலைமையில் உண்ணாவிரதம் என்று கட்சித் தலைமை வெளியிட்ட அறிவிப்பில் இவர்கள் இருவரின் பெயரும் இல்லை. முதல்வர், துணை முதல்வர் உண்ணாவிரதத்தில் பங்கேற்கக் கூடாது என்பதற்காக அவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை திடீரென சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் முதலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவரைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தனர்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் உண்ணாவிரதத்தில் பங்கேற்றதால் அதிமுகவினர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து சென்றனர். இந்நிலையில் மாலை 5.30 மணியளவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்டோர் பழரசம் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர். இதே போன்று மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் உண்ணாவிரதத்தை முடித்தனர்.