நெல்லை கல்குவாரி விபத்து ! இதுவரை ஒரு அமைச்சர் கூட வரல! திமுக அரசு என்ன செய்கிறது? இன்பதுரை ஆவேசம்!
நெல்லை : நெல்லை கல்குவாரி விபத்து காரணமாக இதுவரை 3 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் நடந்து 14 மணி நேரமாகியும் கூட இதுவரை திமுக அமைச்சர்களோ, பேரிடர் மீட்பு குழுவினரோ இங்கு வராதது ஏன்? திமுக அரசு என்ன செய்கிறது? என அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
நெல்லை பொன்னாக்குடி அருகே அமைந்துள்ள கல்குவாரியில் நேற்று இரவு பாறை திடீரென சரிந்து விழுந்த விபத்தில், 300 அடி ஆழ பள்ளத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில், கல்குவாரியில் இருந்து ஏற்கனவே 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாவது நபர் செல்வம் என்பவரை சற்று நேரத்திற்கு முன்பு மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கல்குவாரி விபத்து.. 300 அடி ஆழத்தில் 15 மணி நேரமாக கண்முன்னே ஊசலாடும் உயிர்! ஊர் கூடி கலங்கும் சோகம்
கல்குவாரி விபத்து
மேலும் 3 பேர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், விபத்து நடந்த கல்குவாரியில் நடக்கும் மீட்புப்பணிகள் குறித்து அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், ராதாபுரம் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இன்பதுரை, நெல்லை மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கனேசராஜா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்எல்ஏ இன்பதுரை, "கல்குவாரி உரிமயாளர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சட்டத்துக்குப் புறம்பாக இதுபோல தவறு செய்து கொண்டே இருப்பார்கள்.
திமுக அரசு அலட்சியம்
ஆனால் அதைக் கண்காணித்துத் தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? அதனால் அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரியை கண்காணிக்க வேண்டிய கனிமவளத்துறை அதிகாரிகள் எங்கே? இந்த குவாரிக்கு அனுமதி கொடுத்தது யார்? இந்த கல்குவாரிக்கு கால நீட்டிப்பு கொடுத்தது எப்போது? இதையெல்லாம் மக்களுக்குச் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. விபத்து நடந்து 14 மணி நேரமாகியும் இதுவரை இருவர் மட்டுமே மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
மீட்பு பணிகள் தொய்வு
நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணு உலை, மகேந்திரகிரி இஸ்ரோ ஆய்வு மையம், விஜயநாராயணம் கடற்படை தளம் என முக்கியமான இடங்களில் இது போல விபத்து ஏதாவது ஏற்பட்டால் பேரிடர் மேலாண்மை குழு இப்படித்தான் கால தாமதமாக வருவார்களா? இது இந்த மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இதுவரை ஒரு அமைச்சர் கூட இந்தப் பகுதியை வந்து பார்க்கவில்லை. முதல்வர் இங்கு உடனே வர வேண்டும். அவர் வந்தால்தான் மீட்புப் பணிகள் வேகமாக நடக்கும்.
குவாரிகளை மூட வேண்டும்
நெல்லை மாவட்டத்தில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க இங்குள்ள அனைத்துக் குவாரிகளையும் மூட வேண்டும். குவாரிகள் அனைத்தும் முறையாக நடைபெறுகிறது என்பதை நீதிபதி தலைமையிலான குழு அமைத்து உறுதி செய்த பின்னர் குவாரிகள் செயல்பட அனுமதிக்கலாம். எதற்கெல்லாமோ குழு அமைக்கும் இந்த அரசு இதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும்."என ஆவேசமாகப் பேசினார்.