அதிமுக ஊழலின் சுனாமி… ஊழல் இல்லாத ஆட்சியை பா.ம.க.வால் மட்டுமே தரமுடியும்: டாக்டர் அன்புமணி
திருச்சி: தி.மு.க. ஊழலின் ஊற்றுக்கண் என்றால் அ.தி.மு.க. ஊழலின் சுனாமி. ஒரு சொட்டு கூட மது இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத ஆட்சி, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை இதுதான் எங்கள் லட்சியம் டாக்டர் அன்புமணி கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் மண்டல மாநாடுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் மத்திய மண்டல அரசியல் மாநாடு திருச்சி பஞ்சப்பூரில் நேற்று இரவு நடைபெற்றது.
பாமகவின் மாநில துணை பொதுச்செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் அருள் மணி வரவேற்றார். மாநாட்டில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளையும் ஒரு பிடி பிடித்தார்.
முன்னேற்றம் வரும்
தொடர்ந்து பேசிய அவர், பாட்டாளி மக்கள் கட்சி சிறிய கட்சி அல்ல. தமிழகம் முழுவதும் மக்களின் ஆதரவை பெற்று உள்ளது. தமிழகத்தில் 50 ஆண்டு கால ஊழல் ஆட்சிகள் தொடர வேண்டுமா? மாற்றத்தை விரும்பும் பா.ம.க. ஆட்சி வேண்டுமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் மாற்றத்தை தந்தால் இந்த அன்புமணி முன்னேற்றத்தை தருவான்.
வாய்ப்பு கொடுங்கள்
எனக்கு 5 ஆண்டு காலம் ஆட்சி செய்வதற்கான ஒரு வாய்ப்பை தந்து பாருங்கள். நாங்கள் நல்ல திட்டங்களை செயல்படுத்துவோம். இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் எந்த ஒரு கட்சியும் வரைவு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது இல்லை. மக்களின் கருத்துக்களை கேட்டு வருகிறோம். வருகிற ஜனவரி மாதம் மக்களின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
ஊழல் கட்சிகள்
கல்வி, மருத்துவம் இலவசம் எங்களால் ஒரு பைசா கூட ஊழல் இல்லாத ஆட்சியை தர முடியும். தி.மு.க. ஊழலின் ஊற்றுக்கண் என்றால் அ.தி.மு.க. ஊழலின் சுனாமி. ஒரு சொட்டு கூட மது இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத ஆட்சி, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை இதுதான் எங்கள் லட்சியம். அனைவருக்கும் கல்வியையும், மருத்துவ சேவையையும் இலவசமாக வழங்குவோம். நாங்கள் வழங்கும் இலவச கல்வி கட்டாய கல்வியாக, தரமான கல்வியாக இருக்கும். மாவட்டத்திற்கு ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை அமைப்போம்.
டெல்லியில் போராடுவோம்
காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு பிரச்சனைகளை தீர்க்க ஒரே ஒரு முறை மட்டும் பிரதமருக்கு கடிதம் எழுதுவேன். அந்த கடிதத்திற்கு பதில் இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களையும் திரட்டிக்கொண்டு டெல்லிக்கு சென்று பிரதமர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம். அதற்கும் நடவடிக்கை இல்லை என்றால் நாடாளுமன்றத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து போராடுவோம் என்றார் அன்புமணி ராமதாஸ்