மீண்டும் "தினகரன் எபக்ட்"..? அதிமுக மீண்டும் ஒரு முறை கலகலக்குமா??
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், அக்கட்சியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இறந்தவுடன் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. ஏகப்பட்ட கூத்துக்கள் நடந்தன. பின்னர் தினகரனை ஓரங்கட்டிவிட்டு இபிஎஸ்- ஓபிஎஸ் இணைந்தனர்.
அதிமுகவையும் ஆட்சியையும் மீட்பேன் என தினகரன் சூளுரைத்த நிலையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் முதல்வர் மீது நம்பிக்கையில்லை என அப்போதைய ஆட்சியர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர்.
[அதிமுகவுக்கு எந்தத் தொகுதியிலாவது டெபாசிட் கிடைக்குமா?? ]
தகுதிநீக்கம்
இதையடுத்து கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அந்த 18 பேரையும் சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் 18 பேரும் வழக்கு தொடுத்துள்ளனர். எப்படியோ எடப்பாடி ஆட்சி தப்பி வண்டி ஓடிக் கொண்டுள்ளது.
புதிய கட்சி தொடங்கினார்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மாபெரும் கட்சிகளான அதிமுக, திமுகவை புறந்தள்ளிவிட்டு சுயேச்சையாக நின்ற தினகரன் வெற்றி பெற்று எம்எல்ஏவானார். அதிமுகவை மீட்பேன் என்ற தினகரன் அமமுக என்ற புதிய அமைப்பை தொடங்கிவிட்டார்.
டிடிவி தினகரனுக்கு ஆதரவு
இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருதாச்சலம் கலைச்செல்வன் உள்ளிட்டோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், முதல்வருக்கு எதிராக பேசி சிறை சென்றுவிட்டு வந்தார். அவரை தினகரன் ஆதரவாளரான அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதி சென்று சந்தித்து பேசினார்.
நோட்டீஸ்
கருணாஸ் உள்பட 4 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவில் 50 எம்எல்ஏக்கள் உள்ளதாக எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதிமுக மீண்டும் பிளவுப்பட்டு ஆட்டம் காணுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கருணாஸை வைத்து அரசியல்
கட்சியில் ஒரு சிலருக்கு வாக்குறுதி அளித்தபடி பதவிகளை இபிஎஸ்- ஓபிஎஸ் தரவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது பாஜகவுடன் அதிமுக மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதால் கருணாஸை வைத்து அரசியல் செய்வதன் மூலம் அதிருப்தியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுக்கும் வேலைகளில் தினகரன் இறங்குவார் என்றே தெரிகிறது. இதனால் அதிமுக மீண்டும் கலகலக்கும்.