ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு அதிமுக போட்ட தீம் பாட்டு எங்க இருந்து சுட்டது தெரியுமா?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்காக அதிமுகவின் ஐடி அணி தீம் பாட்டு போட்டு பட்டையை கிளப்பி வருகின்றனர். இது ஏற்கனவே இரட்டை மின்கம்பத்திற்காக போட்ட பாட்டுதான்.
Recommended Video
சென்னை: ஆர்.கே. நகரில் அதிமுகவின் ஓபிஎஸ் அணிக்காக மதுசூதனன் போட்டியிட்ட போது போடப்பட்ட தீம் பாடலை இப்போது இரட்டை இலைக்காக பட்டி டிங்கரிங் செய்து ஓட்டு கேட்கின்றனர்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, தினகரன் அணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்த தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை தெரிந்து கொள்வதற்காக அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மாறி மாறி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
மேள தாளம்... ஊர்வலம்
ஆர்.கே. நகரில் கடந்த 1ஆம் தேதியில் இருந்து பிரச்சாரம் களைகட்டியுள்ளது. 59 பேர் போட்டியிடுகின்றனர் என்றாலும் 5 வேட்பாளர்களுக்கு இடையேதான் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஐவரும் தங்களின் சின்னங்களுடன் ஆர்.கே. நகரை வலம் வருகின்றனர்.
தீம் பாட்டு போட்டு கலக்கல்
அதிமுக ஐடி சார்பில் ஒரு ராப் பாட்டு போட்டு ஓட்டு கேட்கின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த பாடல் வைரலாகி வருகிறது. ஜெயலலிதாவின் பிரபலமான வசனமான "மக்களால் நான்... மக்களுக்காக நான்" என்று ஜெயலலிதா பேசுவதையும் இணைத்துள்ளனர். வரவேற்பும், எதிர்ப்பும் கலந்த விமர்சனம் வெளியாகி வருகிறது.
மதுசூதனன் வேட்பாளர்
இளைஞர்கள் பெண்களின் குத்தாட்டம், அதிமுக அணிகள் இணைப்பு, இரட்டை இலை மீட்பு, எம்ஜிஆர், ஜெயலலிதா பேச்சு ஆகியன இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த பாடல் ஓபிஎஸ் அணி தனியாக பிரிந்து போட்டியிட்ட போது உருவான பாடல். அப்போதும் மதுசூதனன்தான் வேட்பாளர்.
பட்டி டிங்கரிங் பாத்திருக்காங்க
அண்ணன் என்று ஓபிஎஸ்சை காட்டி இரட்டை மின்கம்பத்திற்கு அப்போது வாக்கு கேட்டனர். இப்போது அதையே பட்டி டிங்கரிங் செய்து ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் ஒட்ட வைத்திருக்கின்றனர். அடடா எங்க இருந்து எப்படி சுட்ருக்காங்க பாருங்க. வேட்பாளர் ஒருவரே என்பதால் இதை ஒளிபரப்புவது எளிதாகி விட்டது. சுட்டாலும் அவங்க பாட்டையே சுட்ருக்காங்க.