பத்திரிக்கையாளர்களை நாய்கள் என்று திட்டிய அதிமுக ஐடி விங் நிர்வாகி.. கட்சியில் இருந்து நீக்கம்
பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் நாய்கள் என்று அதிமுக சமூக வலைதள பிரிவை சேர்ந்த நிர்வாகி ஹரி பிரபாகரன் சர்ச்சையான டிவிட் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் நாய்கள் என்று அதிமுக சமூக வலைதள பிரிவை சேர்ந்த நிர்வாகி ஹரி பிரபாகரன் சர்ச்சையான டிவிட் செய்து இருந்தார். தற்போது இவர் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்..
ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டம் கொடூரமான துப்பாக்கி சூட்டுடன் முடிவடைந்தது. இதில் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றனர்.
அமைதியான போராட்டம், கடைசி நேரத்தில் மொத்தமாக போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டால் நாசமானது. போராட்டம் செய்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் கொடூரமாக துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியது. இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதில் காயமடைந்தவர்கள் எல்லோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காலை தூத்துக்குடியில் சிகிச்சை பெறும் மக்களை சந்தித்தார் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம். ஆனால் தூத்துக்குடி மருத்துவமனைக்கு உள்ளே பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
ஹரி
இது பெரிய சர்ச்சை ஆனது. இதுகுறித்து விளக்கம் அளித்த, பன்னீர்செல்வம், பத்திரிகையாளர்கள் நேரடியாக கேட்டு இருந்தால் உள்ளே அனுமதித்து இருப்பேன் என்று பேட்டியளித்தார். ஆனால் அதிமுகவின் சமூக வலைதள நிர்வாகி ஹரிபிரபாகரன் இதுகுறித்து மோசமான டிவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இவர் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட ஐடி பிரிவு இணை செயலாளராக இருந்தார்.
டிவிட்
அதிமுக சமூக வலைதள நிர்வாகி, ஹரி பிரபாகரன், ''துணை முதல்வர் சென்ற தூத்துக்குடி மருத்துவமனைக்கு உள்ளே பத்திரிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை, பிஸ்கெட்டிற்காக குரைக்கும் நாய்களை கேட்டிற்கு வெளியேதான் கட்டி வைப்பார்கள். உள்ளே விட மாட்டார்கள்'' என்று மோசமாக கூறியுள்ளார்.
|
மன்னிப்பு கேட்டார்
இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இவருக்கு எதிராக பத்திரிக்கையாளர்கள் கோபமாக டிவிட் செய்ய ஆரம்பித்தனர். இதையடுத்து இவர் தனது டிவிட்டை டெலிட் செய்துள்ளார். மேலும் அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மனமுடைந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
|
நீக்கினார்கள்
இந்த நிலையில் இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து ஹரி அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அனைத்து விதமான அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் மொத்தமாக அவர் நீக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை ஹரியே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.