அதிமுகவே ஒரு பிழைதான்.. ஈவிகேஎஸ் நெத்தியடி!
புதுக்கோட்டை: நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் உள்ள பிழையை நீக்குவதற்கு நீதிபதிக்கு உரிமை உள்ளது என்று கூறுகிறது அதிமுக. ஆனால் உண்மையில் அதிமுகவே ஒரு பிழைதான் என்று அதிரடியாக கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
புதுக்கோட்டைக்கு இன்று வந்த இளங்கோவன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வரும் 22ம் தேதி நடக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தான் அக்கட்சி எம்எல்ஏக்களுக்கு கடைசி கூட்டமாக இருக்கும். ஜெயலலிதா சொத்து வழக்கில் மேல்முறையீடு செய்வதில் தாமதம் ஏதும் இல்லை. ஆச்சாரியா மேல்முறையீடு செய்வதற்கு முகாந்தரம் உள்ளது என்று கர்நாடக அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். எனவே விரைவில் அந்த அரசு மேல்முறையீடு செய்யும்.
அதிமுக தரப்பில் தீர்ப்பில் உள்ள பிழையை திருத்துவதற்கு உரிமை உள்ளது என்று கூறி வருகிறார்கள். ஆனால் அதிமுகவே ஒரு பிழைதான்.
ஜெயலலிதாவை எதிர்கொள்ள முடியாமல் தான் அனைத்து கட்சிகளும் அவரது தீர்ப்பிற்கு எதிராக ஒன்று கூடியுள்ளதா என்று கேட்காதீர்கள். காரணம், பாஜக அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை நேற்று அதிமுகவை எதிர்த்தவர்கள். இன்று அவரை பாராட்டியுள்ளதோடு அவரால் தான் நல்லாட்சி தர முடியும் என்று கூறிவருகிறார்கள்.
அதிமுக என்ற ஊழல் கட்சிக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளோம். ஆனால் மேகதாது பிரச்சனையில் தமிழக முதல்வர் செய்ய தவறியதை தேமுதிக தலைவர் விஜயகாந்த் செய்தார். அதனால் தான் அவரது தலைமையில் எதிர்கட்சிள் ஒன்று சேர்ந்தன. அதற்காக விஜயகாந்தை நான் பாராட்டுகின்றேன்.
பல பொது பிரச்சனையில் காங்கிரசின் கருத்துக்களும் திமுக, தேமுதிக, கம்யூனிஸ்ட்களின் கருத்துக்களும் ஒத்துப் போவதால் நாங்கள் தற்போது பொது பிரச்சனையில் ஒன்று சேர்ந்துள்ளோம். இதை வைத்து கூட்டணி அமையும் என்று கற்பனை செய்து கொள்ளக் கூடாது. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் மேலிடம் தான் முடிவு செய்யும்.
ஆளுநரிடம் தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை அளித்துள்ளேன். ஆளுனர் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் ஒவ்வொரு அமைச்சரின் ஊழலையும் ஆதாரத்துடன் தினந்தோறும் வெளியிடுவேன் என்றார் இளங்கோவன்.