காசு.. காசு.. கையெழுத்துப் போடக் கூட பணம் கேட்கும் நிர்வாகிகள்.. ஷாக்கில் தினகரன்!
பணம் கொடுத்தால்தான் கையெழுத்து போடுவோம் என அதிமுக நிர்வாகிகள் கறார் காட்டுவதால் டிடிவி தினகரன் அதிர்ச்சியடைந்துள்ளாராம்.
சென்னை: தேர்தல் ஆணையத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி விசாரணை நடைபெறும் போது அதிமுக நிர்வாகிகளின் கையெழுத்தை பெற்று பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என தினகரன் உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக கையெழுத்து கேட்டு போனால் காசு கொடுக்காமல் போட மறுக்கிறார்களாம் நிர்வாகிகள்.
சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி தப்புமா என்பதற்கான பதில், வரும் 17ம் தேதி தெரிந்துவிடும். ' மாவட்டங்களில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கும் பணியில் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் தீவிரமாக உள்ளனர்.
பணம் கொடுத்தால்தான் கையெழுத்து போடுவோம் என அவர்களும் பிடிவாதம் காட்டுகின்றனர் என்கின்றனர் நிர்வாகிகள்.
சென்னை, வானகரத்தில் நடந்த பொதுக்குழுவில் சசிகலாவை தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர் அ.தி.மு.க நிர்வாகிகள். அப்போதைய முதல்வர் பன்னீர்செல்வமே சசிகலாவை முன்மொழிந்தார். இதன்பிறகு சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா.
சசிகலாவிற்கு எதிராக மனு
இதை ரசிக்காத பன்னீர்செல்வம், தனி அணியை உருவாக்கினார். சசிகலா தேர்வு செய்யப்பட்டது குறித்து ஆரம்பம் முதலே ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா போராடி வந்தார். இந்த மனுவோடு சேர்த்து பன்னீர்செல்வம் அணியின் சார்பில் மைத்ரேயனும் மனு கொடுத்தார்.
தேர்தல் ஆணையம் நிராகரிப்பு
அ.தி.மு.கவின் சட்டவிதிகளின்படி, சசிகலா தேர்வு செய்யப்படவில்லை. அவரது பதவி செல்லாது என அறிவிக்க வேண்டும்' என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதுதொடர்பாக, தினகரன் கொடுத்த விளக்கத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
சசிகலா விளக்கக் கடிதம்
ஆணையத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் பட்டியலில் தினகரன் இல்லை. எனவே, அவரது விளக்கம் செல்லாது. சசிகலாவே விளக்கம் அளிக்க வேண்டும்' எனவும் கூறியிருந்தனர். இதையடுத்து, பெங்களூரு சிறையில் இருந்து சசிகலாவிடம் விளக்க கடிதத்தை வாங்கினர் அதிமுக வழக்கறிஞர்கள்.
ஏப்ரல் 17
இரட்டை இலை சின்னத்தை யாருக்கு வழங்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டதால், சின்னத்தை முடக்கி வைத்துள்ளது தேர்தல் ஆணையம். ஏப்ரல் 17ம் தேதி தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடக்க இருக்கிறது. இந்த விசாரணையின்போது, தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகளின் கையெழுத்தையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என தினகரன் உத்தரவிட்டிருக்கிறார்.
வட்டம், மாவட்டம்
இதற்கான பணிகளில் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். கிளை, ஒன்றியம், வட்டம், நகரம், மாவட்டம் என பொறுப்பாளர்கள் அனைவரிடமும் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. மாவட்டத்துக்கு முப்பது முதல் நாற்பதாயிரம் பேர் என கையெழுத்து பெறும் வேலைகள் வேகமெடுத்துள்ளன.
நிர்வாகிகள் குமுறல்
மாவட்ட பொறுப்புகளில் உள்ளவர்களிடம் கையெழுத்து பெறுவதில் எந்தத் தயக்கமும் இல்லை. கிளை, ஒன்றியம், வட்டம் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கையெழுத்து கேட்கச் சென்றாலே, ' நீங்கள் தலைமையுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள். உங்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறார்கள். எங்களுக்கு எந்த உதவியும் வந்து சேரவில்லை. கட்சியைக் காப்பாற்ற எங்கள் கையெழுத்து தேவை என்பதால் வருகிறீர்கள்.
பணம் வேண்டும்
மற்ற நேரங்களில் சிறிய உதவி கேட்டுச் சென்றாலே, உங்கள் உதவியாளர்கள் திருப்பி அனுப்புகிறார்கள். கையெழுத்து போட வேண்டும் என்றால், எங்களுக்கும் பணம் கொடுங்கள்' என நேரிடையாகவே கேட்கின்றனர். இதனால், மாவட்ட செயலாளர்கள் பலரும் அதிர்ச்சியோடு வலம் வருகின்றனர்.
கையெழுத்து வேட்டை
நிர்வாகிகளின் பதவிக்கேற்ப ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையில் கொடுக்கின்றனர். இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால், தலைமைக் கழகத்தில் உள்ளவர்கள் பிரமாண பத்திரம் கேட்டு நெருக்குகின்றனர். ஆர்.கே.நகர் தேர்தலால் இந்தப் பணிகள் சுணங்கி இருந்தன. தற்போது கொடுக்க வேண்டியதை கொடுத்து வேகமாக கையெழுத்து வேட்டையாடி வருகின்றனர் என்கிறார் அதிமுக நிர்வாகி.