முத்தரையர்கள் எதிர்ப்பால் முசிறி, மண்ணச்சநல்லூரில் வெற்றி வாய்ப்பை இழக்கும் அதிமுக - நியூஸ் 7
சென்னை: திருச்சி மாவட்டத்தில் முசிறி, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகளில் அதிமுக தோல்வி அடையும் நிலையில் உள்ளதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக்கணிப்பு கூறுகின்றது
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 சட்டசபை தொகுதியில் முசிறி, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் முத்தரையர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி ஆகும்.
தற்போது இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு எதிர்ப்பு அலை வீசுவதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக அந்த சமூகத்தினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அது திருச்சி மாவட்டத்தில் அதிமுகவின் வெற்றியை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்கு பெரும்பான்மையாக இருக்கும் முத்தரையர் சமூகத்தினரை விஜயபாஸ்கர் பகைத்துக் கொண்டது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் எங்கள் சமூகத்தை இழிவாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கவில்லை எனவும் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பல முறை அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சுமத்துகின்றனர்.
இதனால் வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக களமிறங்குகிறது முத்தரையர் சமூகத்து கட்சியான நமது மக்கள் கட்சி. இவர்கள் தனித்து போட்டியிடுவதால் அ.தி.மு.க.,வுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக முத்தரையர் அதிக அளவில் வசிக்கக்கூடிய முசிறி, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் தொகுதிகளில் திமுக வெல்லும் வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நேற்று வெளியான நியூஸ் 7 - தினமலர் நாளிதழ் கருத்துக்கணிப்பின்படி ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவுக்கு 39.5 சதவீத ஆதரவு காணப்படுகிறது. அதேசமயம் திமுவுக்கு 42.9 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
அதேபோல் முசிறி தொகுதியில் அதிமுகவுக்கு 27.5 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுகவுக்கு 41.9 சதவீத ஆதரவு காணப்படுகிறது. மேலும் மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுகவுக்கு 32.1 சதவீத ஆதரவும், திமுகவுக்கு 42.2 சதவீத ஆதரவும் கிடைத்துள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக களமிறங்கியுள்ள முத்தரையர் சமூகத்தினரால் அமைச்சருக்கு மட்டுமல்லாது அ.தி.மு.க.விற்கும் சட்டசபை தேர்தலில் பெரும் பிரச்னையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக ஆளும் கட்சியினர் கருதுகின்றனர்.