70 வயது பிச்சைக்காரரை அசிங்கமாக பேசி அடித்துக் காயப்படுத்திய அதிமுக பிரமுகர்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரபல அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முன்பு பிச்சை எடுத்துப் பிழைத்து வரும் 70 வயது முதியவரை அசிங்கமாகப் பேசியதோடு அடித்தும் காயப்படுத்தியுள்ளார் ஒரு அதிமுக பிரமுகர். இவர் இந்தக் கோவிலில் முன்பு அறங்காவலாரக இருந்துள்ளார்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முன்பு 50 பிச்சைக்காரர்கள் உள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரும் காசை வைத்துத்தான் அன்றாட ஜீவனம் செய்து வருகின்றனர். பலர் வயதானவர்கள்.
அங்கு தண்டபாணி என்ற 70 வயது முதியவரும் பிச்சை எடுத்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்தக் கோவிலின் முன்னாள் அறங்காவலரும், அதிமுகவைச் சேர்ந்தவருமான நடராஜன் என்பவர் அங்கு வந்து தண்டபாணியை இங்கு வந்து பிச்சை எடுக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளார். அசிங்கமாகவும் பேசி அடித்துள்ளார். இதில் தண்டபாணிக்கு காயம் ஏற்பட்டது.
அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக போலீஸில் புகார் தரப்பட்டது. அதன் பேரில் போலீஸார் நடராஜனை கைது செய்தனர்.
வயதான பிச்சைக்காரரைப் போய் அடிக்கும் புத்தி என்ன புத்தியோ!