ஜெ. வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற அதிமுக நிர்வாகி கைது
சென்னை: சென்னையில் முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பு வையம்பட்டி அதிமுக நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுயுள்ளது. தீக்குளிக்க முயன்ற வையம்பட்டி அதிமுக நிர்வாகி ராமசாமியை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டின் அருகே கையில் மண்ணெண்ணை டின்னோடு வந்த அதிமுக நிர்வாகி ராமசாமி வந்தார். ஆவேசமாக காணப்பட்ட ராமசாமி திடீரென முதல்வரை பாராட்டி முழக்கமிட்டார்.
கோஷம் வந்த திசையைப் பார்த்து போலீசார் ஓடி வர, தனது கைகளில் மண்ணெண்ணையோடு இருந்த ராமசாமி தனது உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றினார். அடுத்த கட்ட முயற்சிக்குப் போவதற்கு முன் அவரைத் தடுத்து நிறுத்தினர். இதுபற்றி, உடனடியாக தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தேனாம்பேட்டை போலீசார் ராமசாமியைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமசாமி தீக்குளிக்க முயற்சித்ததற்கான காரணம் எதுவும் தெரியவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மணப்பாறையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி மோகன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர் இந்த நிலையில் இன்று வையம்பட்டியைச் சேர்ந்த நிர்வாகி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா கடந்த சில தினங்களாக போயஸ்கார்டனில் வேட்பாளர்களை நேர்காணல் செய்து வரும் நிலையில் அதிமுக நிர்வாகிகள் தற்கொலைக்கு முயற்சி செய்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.