உள்ளாட்சித் தேர்தலில் சீட் இல்லை.. கோவில்பட்டி அதிமுக செயலாளர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி!
திருநெல்வேலி: கோவில்பட்டி நகராட்சியில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் செல்போன் டவரில் ஏறி அதிமுக செயலாளர் தற்கொலைக்கு முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் இம்மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடு்ம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது. இதில் கோவில்பட்டி நகராட்சி 36 வார்டுகளின் வேட்பாளர் பட்டியலும் அடக்கம்.
இந்நிலையில், கோவில்பட்டி தெற்கு புது கிராமத்தை சேர்ந்த அதிமுக செயலாளர், 8வது வார்டுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி, இலுப்பையூரணியில் உள்ள செல்போன் டவரில் நேற்று மாலை விருவிருவென ஏறினார். அதன் உச்சியில் அமர்ந்து கொண்டு சீட் கிடைக்காததால் டவரில் இருந்து குதிக்கப் போகிறேன் என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும், 1972 முதல் வார்டு செயலாளராக இருப்பதாகவும், ஜெயலலிதா கைதான போது 28 நாட்கள் சிறையில் இருந்ததாகவும், கூறிய அவர், கடந்த தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் இம்முறை அனுமதி கேட்டு பணம் கட்டினாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார், உடனடியாக வந்து அதிமுக செயலாளரை கீழே இறங்கி வருமாறு அழைத்தனர். அதற்கு அவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தந்தால்தான் கீழே இறங்குவேன் என்றும் இல்லை என்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டினார். தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி ராமசந்திரனை போலீசார் கீழே இறங்கினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.