பிரச்சாரத்தில் வெயிலில் சுருண்டு விழுந்து அதிமுக நிர்வாகி பலி
நாகை: நாகை அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு சென்ற ஆளுங்கட்சி நிர்வாகி வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து உயிர் இழந்தார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கட்சியினர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி, வீதியாக வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்த ஆண்டு கோடை காலம் துவங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசி மக்களை வாட்டி வதைக்கிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் நாகை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோபாலுக்கு ஆதரவாக அக்கட்சியினர் வெயிலில் பிரச்சாரம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்து உள்ள தில்லைவிளாகம் ஊராட்சி அதிமுக கிளை செயலாளராக இருந்த பொன்முடி(56) கட்சியினரோடு சேர்ந்து தில்லைவிளாகம் பகுதியில் தெருத் தெருவாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது சுட்டெரித்த வெயிலை தாங்க முடியாமல் பொன்முடி மயக்கம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் இழந்தார். அவருக்கு பேபி என்ற மனைவி, ஆசைத்தம்பி, சிற்றரசு ஆகிய 2 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.