திருவண்ணாமலை கோயில் முன் மர்ம நபர்கள் கொடூரம்.. அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை: அதிமுக பிரமுகர் கனகராஜ் என்பவரை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் நகர்மன்ற தலைவராக செயலாற்றியவர் அதிமுகவைச் சேர்ந்த கனகராஜ். இவர் வழக்கம் போல் வெளியே சென்றுவிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது, 2 சக்கர வாகனத்தில் 3 பேர் வந்து திடீரென அவரை வழி மறித்துள்ளனர்.
திடுக்கிட்டு நின்ற கனகராஜை முகமூடி அணிந்த 3 பேரும் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக பிரமுகர் ஏன் கொல்லப்பட்டார், மர்ம நபர்கள் யார், அதிமுகவில் தற்போது நடந்து வரும் அதிகாரப் போட்டிக்கும் இந்த சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.