மந்திரி இருக்காரு, மந்திரியோட மச்சான் இருக்காரு.. ஈழப் பெண்ணைக் கைவிட்ட அதிமுக பிரமுகரின் மிரட்டல்
திண்டுக்கல்: ஈழப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு, குடும்பமும் நடத்தி, அந்தப் பெண் கர்ப்பமாகியுள்ள நிலையில் அவரைக் கைவிட்டுள்ளார் அதிமுக பிரமுகர் ஒருவர். இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தனக்கு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அவரது மைத்துனர் கண்ணன் ஆகியோரின் ஆதரவு இருப்பதாக கூறிக் கொண்டு திரிகிறாராம் அந்த பிரமுகர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதிக்குட்பட்ட சானார்பட்டி ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் நொச்சி ஓடைப்பட்டியைச் சேர்ந்த கருணாகரன். இவர் அமைச்சருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்கிறார்கள்.
இவருக்குத் திருமணமாகி துளசி என்ற மனைவி உள்ளார். ஆனால் துளசிக்குக் குழந்தை இல்லை. இந்த நிலையில் ஈழ அகதிகள் முகாமில் தங்கியிருந்த லதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அவரையே திருமணமும் செய்து கொண்டார் கருணாகரன். திண்டுக்கலில் வீடு பார்த்து அங்கு அவரை குடி வைத்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் லதா இலங்கை போயிருந்தார். போய் விட்டு ஜூன் 1ம் தேதி திரும்பி வந்தார். வந்தால், வீடு பூட்டிக் கிடந்தது. வீட்டில் உள்ள பொருட்களையும் காணவில்லை. கருணாகரனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தன்னை இனிமேல் தொடர்பு கொள்ளக் கூடாது. நேரில் வரக் கூடாது என்று அவர் கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பாக பிரச்சினை செய்ய நினைத்தால் எனக்கு அமைச்சர் ஆதரவு இருக்கிறது. அமைச்சரின் மச்சான் கண்ணன் ஆதரவு இருக்கிறது என்று கூறினாராம் கருணாகரன்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லதா, சென்னைக்குக் கிளம்பி வந்தார். நேராக நாம் தமிழர் தலைவர் சீமானைச் சந்தித்தார். முறையிட்டார். பின்னர் அவருடைய ஆலோசனையின்படி டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தார் லதா. புகாரைப் பெற்ற டிஜிபி அலுவலகம், திண்டுக்கல் டிஎஸ்பி வனிதாவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து லதாவிடம் முதலில் வனிதா விசாரணை நடத்தினார். பின்னர் கருணாகரனை வர வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது லதாவிடம் நகை, பணம் வாங்கியது என்னவோ உண்மைதான். ஆனால் அவரது கர்ப்பத்திற்கு நான் காரணமல்ல என்று கூறி விட்டாராம்.
லதாவிடமிருந்து பல லட்சம் ரூபாய் பணம், 20 பவுன் நகைகளை கருணாகரன் வாங்கியதாக கூறப்படுகிறது. கருணாகரனை மீண்டும் விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.