சர்ச்சை போஸ்டர் ஒட்டிய "1000 விளக்கு" கே.சி. விஜய்.. அதிமுககாரர்தான்!
சென்னை: சென்னையில் கன்னடர்களை மிரட்டும் வகையில் போஸ்டர் போட்ட 1000 விளக்கு கே.சி. விஜய் என்பவர் அதிமுககாரர்தான் என்பதை அவரே ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் அவர் அதிமுக இல்லை என்று ஆவடி குமார் என்ற அதிமுக தலைமைக் கழக பேச்சாளர் கூறுகிறார்.
ஜெயலலிதா ஜாமீன் மனு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த சமயத்தில் சென்னையை ஒரு சர்ச்சை போஸ்டர் பரபரப்பில் ஆழ்த்தியது. அதில் தமிழகத்தில் வசிக்கும் கன்னடர்களை சிறைபிடிப்போம் என்ற வாசகம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக பெங்களூர் போலீஸ் கமிஷனர் ரெட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜைத் தொடர்பு கொண்டு பேசி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அந்த போஸ்டர் அகற்றப்பட்டது.
எச்சரிக்கை மட்டுமே... நடவடிக்கை இல்லை
ஆனால் இந்த போஸ்டரை ஒட்டிய அதிமுகவினர் மீது போலீஸார் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. மாறாக எச்சரிக்கையுடன் விட்டு விட்டனர்.
அம்மாவை விடுவிக்காவிட்டால்
அந்த சர்ச்சைக்குரிய போஸ்டரில் எச்சரிக்கை எச்சரிக்கை. வஞ்சக தீர்ப்பு வழங்கிய கர்நாடக நீதிமன்றமே, மக்கள் முதல்வர் அம்மா அவர்களை உடனே விடுதலை செய். இல்லையேன்றால், தமிழகத்தில் வாழும் கர்நாடக மக்கள் அனைவரையும் சிறை பிடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
வளர்மதி பெயரில்
இந்த போஸ்டரில் அதிமுக எம்.பி. ப.குமார், அமைச்சர் பா. வளர்மதி, எம்.எல்.ஏ வி.பி. கலைராஜன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
ஏற்பாடு 1000 விளக்கு கே.சி. விஜய்
இந்த போஸ்டரை ஒட்ட ஏற்பாடு செய்தவர் 1000 விளக்கு (இப்படித்தான் அதில் போட்டுள்ளது) கே.சி. விஜய் என்பவர் ஆவார். இவர் தென் சென்னை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் என்று போஸ்டரில் போட்டுள்ளனர். மேலும் முன்னாள் மாவட்டச் செயலாளர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை என்றும் போட்டுள்ளனர்.
மறுத்துப் பேசிய ஆவடி குமார்
ஆனால் விஜய் அதிமுகவைச் சேர்ந்தவர் இல்லை என்று தலைமைக் கழக பேச்சாளர் ஆவடி குமார் மறுத்துக் கூறியிருந்தார். இருப்பினும் விஜய் அதிமுகவைச் சேர்ந்தவர்தான் என்பதை அவரே நிரூபித்துள்ளார்.
நானாகதான் ஒட்டினேன்
இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஜெயலலிதாவை, வஞ்சகம், சூழ்ச்சி செய்து, கர்நாடகத்தில் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருக்கின்றனர். உடனடியாக ஜாமீன் வழங்குவதில் நீதிமன்றத்துக்கோ, கர்நாடக அரசுக்கோ என்ன பிரச்னை.
வேறு வழி தெரியவில்லையாம்
நாங்கள், பல்வேறு வகைகளில், நடத்திய போராட்டங்களுக்கு யாரும் மதிப்பு கொடுக்கவில்லை. அதனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தான், இங்கிருக்கும் கர்நாடக மக்களை சிறை பிடிப்போம் என, போஸ்டர் ஒட்டினேன். காவிரி பிரச்னையில், தமிழகத்துக்கு சாதகமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, ஜெயலலிதா பெற்று விட்டார் என்றதும், சதி செய்து, அவரை சிறைப்படுத்தி உள்ளனர்.
விளைவுகளை சந்திக்க வேண்டும்
இந்த போஸ்டருக்குப் பின்னும், கர்நாடக நீதிமன்றம் ஜெ.,வுக்கு ஜாமீன் வழங்கவில்லை. விளைவுகளை கர்நாடகம் சந்தித்துத் தான் ஆக வேண்டும். இந்த விஷயத்தில், கட்சிக்கும் மற்றவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.