இன்று அமாவாசை... அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என தொண்டர்கள் எதிர்பார்ப்பு
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகளின் வேட்பாளர் தேர்வு பணி மும்முரமாகியுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
தமிழக சட்டசபைக்கு மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அதிமுக, திமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெற்றன. பின்னர் திமுக, தேமுதிகவில் மும்முரமாக நேர்காணல் நடத்தப்பட்டது. தேமுதிகவில் நேர்காணல் முடிவடைந்துவிட்டது.
மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் விருப்பமனுக்களில் இருந்து வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நேர்காணலை பிரதோஷ தினமான ஞாயிறன்று நடத்தினார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
இந்நிலையில் சிவராத்திரி கழிந்த பிறகான அமாவாசை தினமான இன்று தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் எதிர்ப்பார்ப்பினைத் தெரிவித்துள்ளன. இதனையடுத்து அதிமுகவினர் இன்றைய தேர்தல் அறிவிப்புகளுக்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.