நல்ல வேளை மாத்திரையில் "ஸ்டிக்கர்" ஒட்டலை!
சென்னை: அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி நடந்த மருத்துவ முகாமில் ஏகப்பட்ட சுவாரஸ்ய சமாச்சாரங்கள் நடந்துள்ளன.
பெரும்பாலான இடங்களில் முகாம்களுக்குப் போதிய கூட்டமே இல்லையாம். வாங்க வாங்க என்று அதிமுகவினர் வலியுறுத்திக் கூப்பிட்டும் கூட மக்கள் முடியாது என்று கூறி பல இடங்களில் வர மறுத்து விட்டனராம்.
இதனால் முகாம்களுக்கு ஏற்பாடு செய்தவர்கள் பெரும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனராம். பல இடங்களில் போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டு முகாமை முடித்துக் கொண்டு போய் விட்டனராம்.
ஜெயலலிதா பிறந்த நாள்
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் பிப்ரவரி 24ம் தேதி வருகிறது. இது அவருக்கு 68வது பிறந்த நாளாகும். இதையொட்டி தமிழகம் முழுவதும் விதம் விதமான கொண்டாட்டங்களில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவ முகாம்
அதில் ஒரு பகுதியாக மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு மாவட்டங்களில் இந்த முகாம்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சென்னையில் வளர்மதி
சென்னையில் அமைச்சர் பா. வளர்மதி தலைமையில் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டவர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இலவச கண் கண்ணாடிகளும், மருந்து மாத்திரையும் இலவசமாக தரப்பட்டன.
மக்களே வராத கடலூர் முகாம்
கடலூரில் நடந்த முகாமில்தான் பெரும் களேபரமாகி விட்டது. அங்கு மக்கள் கூட்டமே வரவில்லையாம். மாரடைப்பு தொடர்பான அறுவை சிகிச்சை, இதய வால்வு, தோல் நோய் அறுவை சிகிச்சை, எலும்பு மூட்டு உள்நோக்கி பொருத்துதல், முதுகு எலும்பு விலகுதல், நரம்பு பாதித்தல் சரிசெய்தல், புற்றுநோய் பாதிக்கப்பட்டவருக்கான சிகிச்சை என 32 வகையான முக்கிய நோய்களுக்கான உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்து.
ஊரெல்லாம் பேனர்
மேலும் ஊரெல்லாம் பேனரும் கட்டியிருந்தனர். ஆனாலும் கூட்டம் வரவில்லை. பெரும்பாலான இருக்கைகள் காலியாகவே கிடந்தன. இதனால் முகாமுக்கு ஏற்பாடு செய்தவர்கள் டென்ஷனாகி விட்டனர். இதையடுத்து அப்படியும் இப்படியுமாக கூட்டத்தைக் கூட்டி வந்து முகாமை ஒரு வழியாக முடித்து ஓய்ந்தனர் அதிமுகவினர்.
நல்லவேளை.. மக்களுக்கு வழங்கப்பட்ட மருந்து, மாத்திரையில் ஸ்டிக்கர் ஒட்டாமல் தந்தனர்..!