கரூரில் இலவச வேட்டி, சேலையை வினியோகம் செய்த அதிமுக: கண்டு கொள்ளாத திமுக!
கரூர்: கரூர் தொகுதியில் அதிமுகவினர் பொது மக்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்கி வருகிறார்களாம்.
கரூரில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சின்னசாமியும், அதிமுக சார்பில் தற்போதைய எம்.பி. தம்பிதுரையும் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
முதல்வர் ஜெயலலிதா கரூர் வந்து சென்ற பின்பு தேர்தல் பிரச்சாரம், தேர்தல் வியூகம், பண வினியோகம், தொண்டர்கள் ஒருங்கிணைப்பு என சகல விதத்திலும் அதிமுக, திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி வருகின்றது.
இந்த நிலையில் கரூர் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் இலவசமாக வேட்டி, சேலை வீடு வீடாக வழங்கப்பட்டது. ஒரு குழுவினர் கட்சி பேதம் இன்றி அனைவரது வீடுகளுக்கும் அள்ளிக் கொடுத்தனர்.
இந்த தகவல் திமுக வேட்பாளர் சின்னசாமி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் சின்னாமியோ, வாக்காளர்களுக்கு யார் எதைக் கொடுத்தாலும் அதை தடுக்க வேண்டாம். அப்படி தடுத்தால், வாக்காளர்கள் கோபம் நம் மீது திரும்பிவிடும். எனவே, அதிமுகவினர் தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டால், அதை ஆதாரத்துடன் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். வாக்குப்பதிவுக்கு பின்பு அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துவோம் என கூறியுள்ளாராம்.
இதனால் அதிமுகவினர் குஷியில் வீடு வீடாக இலவசங்களை அள்ளி வழங்கி வருகின்றனர்.