ஈரோடு, பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு
கோவை: ஈரோடு, பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர்களின் நிதி நிறுவனம், குதிரை பண்ணைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
பொள்ளாச்சியில் டாக்டர் மகேந்திரன் என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையினருடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சோதனையில் பங்கேற்றுள்ளனர். அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் வேண்டியவர் டாக்டர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர்களுக்கு தருவதற்கான பணம் மகேந்திரன் வீட்டில் பதுக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல் தெரிவிக்கின்றன.பொள்ளாச்சியில் டாக்டர் மகேந்திரன் என்பவரது குதிரை பண்னையில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் காவ்யன் என்பவருடைய ஒன் எஸ் என்ற நிதி நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
அதிமுக பிரமுகர்களுக்குச் சொந்தமான இரு இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகளுடன் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டில் ரூ. 5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் சென்னை எழும்பூரில் அதிமுக பிரமுகர் விஜய் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் அடுக்கு மாடி குடியிருப்பில் ரூ. 5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.