நிவாரணப் பொருட்களை "அம்மா" தொகுதி குடோனில் பதுக்கிய அதிமுகவினர்.. மக்கள் கொந்தளிப்பு
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு இடங்களிலிருந்து வந்த நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் கைப்பற்றி முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள கிட்டங்கியில் பதுக்கி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த திருட்டுத்தனத்தையடுத்து மக்கள் கொந்தளித்துப் போராட்டத்தில் குதித்தனர்.
வெள்ள நிவாரணப் பொருட்களையும் திருடித் தின்னும் அதிமுகவினரால் மக்கள் கடும் கொந்தளிப்புடன் உள்ளனர். கன மழை மற்றும் செம்பரம்பாக்கம் வெள்ளத்தால் சென்னையே சின்னாபின்னமாகிப் போனது. அதேபோல காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களும் வெள்ளத்தில் சிக்கி சிதைந்தன.
ஆனால் இந்த பகுதி மக்களுக்காக பல்வேறு தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் கொண்டு வந்த கொடுத்த நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் திருடர்கள் போல புகுந்து வழிப்பறி செய்ததும், அதில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டியும் நடந்து கொண்ட செயல் மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கி விட்டது.
இன்னும் அதிமுகவினரின் அட்டகாசம் முடியவில்லை. ஆர்.கே.நகரில் உள்ள சுந்தரம்பிள்ளை தெருவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நேரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து 800 பேருக்கு வழங்க 16 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வந்திறங்கின. ஆனால் அதிமுகவினர் அவற்றை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காமல் குடோனில் வைத்து பதுக்கியதாக புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிமுக கவுன்சிலர் சந்தானத்திடம் இதுதொடர்பாக கேட்டுள்ளனனர். அதற்கு அவர் நிவாரணப் பொருட்கள் பாதி திருடு போய் விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் குடோனை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
பாதிக்கப்பட்ட மக்கள் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், 800 பேருக்கு உண்டான நிவாரணப் பொருட்கள் வந்தது. அதனை விநியோகிக்க டோக்கன் தரப்படவில்லை. கேட்டால் பாதி திருடு போய் விட்டதாக கூறுகின்றனர்.
குடோனில் இருக்கும் ஆட்கள் அனைவரும் அதிமுகவினர். பூட்டியுள்ள குடோனில் எப்படி பொருட்கள் காணாமல் போகும். தொண்டு நிறுவனங்கள் வழங்கும் நிவாரணப் பொருட்களை அதிமுகவினல் பதுக்கி வைக்கின்றனர். அதனை சிலவற்றை எடுத்துக்கொண்டு தருகின்றனர். தொண்டு நிறுவனங்கள் வழங்கிய பொருட்களை நாங்கள் தருகின்றோம் என்று ஆளும் கட்சியினர் பொய் கூறுகினறனர் என்று மக்கள் குமுறல் வெளியிட்டனர்.
என்ன பிழைப்போ இது.