பெண்ணுடன் சேர்த்துப் படம் பிடித்து முத்துக்குமாரசாமியை அசிங்கப்படுத்த முயன்ற அதிமுகவினர்!
சென்னை: நெல்லை வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமியை பெண் பிரச்சினையில் சிக்கவைக்க முயற்சி நடந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுகவினரால் அடித்து துன்புறுத்தப்பட்டதாலும், பெண்ணுடன் சேர்த்து வைத்து மொபைல் போனில் படம் எடுத்த காரணத்தினாலும் அவமானத்திற்கு பயந்து முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டிரைவர்கள் நியமன விவகாரத்தில் முத்துக்குமாரசாமியை அமைச்சரின் பி.ஏவும், தலைமை பொறியாளரும் மட்டும் மிரட்டவில்லை. அதிமுக அடிப்பொடிகள் கூட மிரட்டியுள்ளனர்.
நெல்லை பாலபாக்யா நகரில் உள்ள ஒரு வீடு மற்றும் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து முத்துகுமாரசாமியை மிரட்டியதாகவும், பாலபாக்யா நகரில் அவரை தாக்கியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த பிரச்சனை தொடர்பாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லையில் விசாரணை
இதற்காக சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் நெல்லை வந்து தனது விசாரணையை தொடங்கி உள்ளார்.
பெண்ணை வைத்து நாடகம்
தற்கொலை செய்த முத்துகுமாரசாமியை நெல்லையில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது ஒரு பெண்ணை வைத்து நாடகமாடி தவறாக செல்போன் மூலம் படம் எடுத்து மிரட்டி இருக்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அவமானம் தாங்காமல்
இந்த பிரச்சனையில்தான் முத்துகுமாரசாமியை சிலர் தாக்கி உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தன்னை அவமானப்படுத்தி விடுவார்களோ என்று அவர் மனவேதனை அடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதால் விரைவில் இந்த தற்கொலை வழக்கில் உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.