அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு எப்போது? அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்
அதிமுக இரு அணிகளும் நேரில் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு ஏற்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை: அதிமுகவின் இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் நேரில் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு ஏற்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என செயல்பட்டு வரும் இரு அணிகளும் இப்போது மீண்டும் இணைய உள்ளது. சசிகலா குடும்பம் ஓரம்கட்டப்பட்டதை அடுத்து இப்போது ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் அடுத்தடுத்து அணிகளை இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளையும் ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓ.பி.எஸ். அணி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக இரு அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. இதனால் பேச்சுவார்த்தை தொடங்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ.தி.மு.க.வில் இரு அணிகளும் இணைய வேண்டும் என சாதாரண தொண்டன் விரும்புகிறான். இதேபோல் அனைவரும் விரும்புகிறார்கள்.
இதனால் 2 அணிகளும் இணைந்தே தீரும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளது. இரு அணிகளும் நேரில் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு ஏற்படும். கட்சியும், ஆட்சியும் 100 ஆண்டுகள் வரை இருக்கும் என்றார்
மேலும் இரு அணிகளும் இணைந்து விட்டால் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்படும். சாதாரண தொண்டன் விரும்புவதை போல இரட்டை இலையை மீட்க அனைவரும் பாடுபட்டு வருகிறோம். விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும். முதல்வர் பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.