பிள்ளையார் சுழி போட்டு களத்தில் இறங்கிய அதிமுக.. திருப்பரங்குன்றத்தில் சைக்கிள் பேரணி
திருப்பரங்குன்றத்தில் நடைபபெற்ற அதிமுக சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
சென்னை: திருப்பரங்குன்ற இடைத்தேர்தல் பணிகள் இன்று பிள்ளையார் சுழியுடன் ஆரம்பிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றத்தை பொறுத்தவரை அது அதிமுக கோட்டையா அல்லது அழகிரி கோட்டையா என்றே தெரியவில்லை. ஆர்.கே.நகர்தான் நம் கையை விட்டு போயாச்சு... வரப்போகிற இடைத்தேர்தலையாவது நம் கைக்குள் கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பணி
ஸ்டாலினின் புதுவரவு ஒருபக்கம், தென்தமிழக சிங்கம் என கூறப்பட்ட அழகிரி ஒருபக்கம், இதற்கு நடுவில் கள வேலையை கனக்கச்சிதமாக பார்த்துவரும் தினகரன் ஒருபக்கம் என ரவுண்டி கிடக்கிறது திருப்பரங்குன்றம்!! கிட்டத்தட்ட மற்ற கட்சிக்காரர்கள் அனைவருமே தேர்தல் பணியில் இறங்கிவிட அதிமுகவும் களத்தில் குதிக்க தயாரானது.
சைக்கிள் பேரணி
அதற்காக அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது. அதன் முதல்கட்டமாக 5000 பேர் கலந்து கொள்ளக்கூடிய சைக்கிள் பேரணியை பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தனர். தனக்கன் குளம், திருநகர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் வழியாக, விரகனுார் வரை, இந்தப் பேரணி செல்கிறது.
சுண்டைக்காய் கட்சிகள்
இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, தங்கமணி, ராஜேந்திரபாலஜி, சேவூர் ராமச்சந்திரன், பாஸ்கரன் மற்றும் ராஜலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், திருப்பரங்குன்றத்தில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார். தொடர்ந்து ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசினார். நாங்கள் வெற்றி பிறகு ஸ்டாலின் வெறும் அவர் கட்சிக்கு தலைவராக மட்டும்தான் இருப்பார். பிறகு அனைத்து சுண்டைக் காய் கட்சிகளும் இடைத்தேர்தலோடு காணமால் போய்விடும்'' என்றார்.
100 ஆண்டுகள்
அதேபோல, `திருட்டு வழியில் 20 ரூபாய் நோட்டைக் காட்டி வெற்றி பெற்றவர், திருப்பரங்குன்றத்திலும் திருட்டுத்தனத்தை காட்டலாம் என்று நினைக்கிறார். இங்கே அவரது மாயாஜாலம் வெற்றி பெறாது,' என்றார். இறுதியாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, ``ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க-தான், இன்னும் 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் என்ற வரலாறு படைக்கும்'' என்று உறுதியாக சொல்லி முடித்தார். எப்படியோ, இப்போதே ஆளும் கட்சியினர், திருப்பரங்குன்றத்தில் முகாமிட ஆரம்பித்து விட்டனர். அதிமுகவின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. பார்ப்போம் இனி நடக்கவிருப்பதை!!