அரசு அதிகாரிகள் மூலம் ஓட்டு வாங்க முயற்சி: அதிமுக மீது தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்
சென்னை: அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தி ஆளும் கட்சி ஓட்டு வாங்க முயற்சி செய்வதாக தேர்தல் அதிகாரியிடம் திமுக பரபரப்புப் புகார் ஒன்றை அளித்துள்ளது.
இதுகுறித்து திமுக தலைமைக்கழக வழக்கறிஞர் பரந்தாமன் சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது,
தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2013 14ம் ஆண்டில், ஒரு ஹெக்டேர் அல்லது 0.5 ஹெக்டேர் பரப்பில், சொந்த அல்லது குத்தகை நிலத்தில் திருத்திய நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்பட வேண்டியுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர்களின் அறிவுரைப்படி கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கல் வழங்க வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்டம் சிட்லபாக்கம் வேளாண்மை உதவி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்த சுற்றறிக்கை 27.3.14 அன்று அவரால் கையெழுத்திடப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் அரசு கடித எண் உள்ளிட்ட சில விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. எனவே அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளில் ஏதோ மறைக்கப்படுகிறது என்ற சந்தேகம் எழுகிறது.
பயன் பெறக்கூடிய நபர்களின் பெயர்களை கிராம நிர்வாக அதிகாரி அனுப்பியதும் அவர்களின் வங்கிக் கணக்கில் தலா 3 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என்று தெரிகிறது.
அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை, தேர்தல் நடத்தை விதிகளுக்கு முற்றிலும் முரணாக உள்ளது. அரசு அதிகாரிகள் மூலமாக ஆளும்கட்சி ஓட்டு வாங்கச் செய்யும் முயற்சி இது.
எனவே அந்த வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்த சுற்றறிக்கையின் அடிப்படையில் நிதியுதவி வழங்குவதை நிறுத்த உத்தரவிட வேண்டும்' என இவ்வாறு புகாரில் பரந்தாமன் கூறியுள்ளார்.