'மை ஆவடி' ஆப் மூலம்.. கலக்கும் மாஃபா பாண்டியராஜன் பள்ளி கல்வி துறையில் மாற்றம் கொண்டு வருவாரா?
சென்னை: ஆவடி தொகுதி மக்களுக்காக அந்த தொகுதியின் எம்.எல்.ஏ .மாஃபா பாண்டியராஜன் பிரத்தியோகமாக ' My Avadi' என்ற செயலியை உருவாக்கியுள்ளார். இதை ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து ஆவடி பகுதியில் இருக்கும் பிரச்சனைகளை உடனுக்குடன் தெரிவிக்கலாம் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பாண்டியராஜன் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விளாம்பட்டி கிராமத்தில் 1959 - ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தார். பாண்டியராஜன் சிவகாசி எஸ்ஹெச்என்வி பள்ளியில் பள்ளி படிப்பையும், அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பியுசி வகுப்பையும் நிறைவு செய்தார்.
கோயம்பத்தூர் பிஎஸ்ஜி கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றார். பின் ஜாம்ஷெட்பூர் புனித சேவியர் தொழிலாளர் பயிற்சி கல்லூரியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார். பின் வங்காளத்தில் புகழ் பெற்ற பிரிட்டிஷ் ஆக்சிஜன் கம்பெனியில் மனித வள மேம்பாட்டு துறையில் பணிபுரிந்தார்.
'Mafoi' என்ற நிறுவனத்தை 1992ம் ஆண்டு தொடங்கினார். அறுபதாயிரம் ரூபாயில் 1992 துவங்கபட்ட Mafoi நிறுவனம் 2010 ஆம் ஆண்டு தனது டர்ன் ஓவர் 1000 கோடியை எட்டியது. ஒரு கட்டத்தில் அறுபதாயிரம் ஊழியர்களுடன் தன் வேர்களை விஸ்தரித்தது. இதுவரை 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளார்.
அரசியல் ஆர்வம் காரணமாக பாஜகவில் இணைந்து பின்னர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிகவில் இணைந்து விருதுநகர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவானார்.
சில ஆண்டுகளிலேயே அதிமுக ஆதரவு எம்.எல்.ஏவாக மாறிய பாண்டியராஜன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அதிமுகவின் இணைந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. வெற்றி பெற்று ஆவடி எம்.எல்.ஏவாக பதவியேற்ற அவர், மக்களின் குறை தீர்க்கும் ஆப்ஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். MY AVADi என்ற இந்த ஆப்ஸை http://www.kpandiarajan.com/ என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து உங்கள் வாக்காளர் எண்ணை கொடுத்து Login செய்து உள்ளே சென்று உங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
எம்.எல்.ஏ பாண்டியராஜனின் செயலியில் குறை கேட்கும் இந்த புதிய முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் பாண்டியராஜன். தொகுதி மக்கள் பிரச்சனைகளை களைய ஆப் உருவாக்கிய இவர், பள்ளி கல்வி துறையில் உள்ள குளறுபடிகளை போக்க என்ன நடவடிக்கையை எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.