நில அபகரிப்பு வழக்கில் சிக்கினார் அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி
கோவை: கோவையைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி மீது நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது. ஆறுக்குட்டியின் சொந்த அண்ணனே இந்த புகாரை சுமத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி. இவரது அண்ணன் வி.சி. வேலுச்சாமி. இவர் கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கைச் சந்தித்து ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்குச் சொந்தமான 38 சென்ட் நிலம் காலப்பட்டி கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தை எனது தம்பி ஆறுக்குட்டி, போலியான ஆவணம் மூலம் பொன்னுச்சாமி என்பவருக்கு ரூ. 2 கோடிக்கு விற்று மோசடி செய்து விட்டார்.
இந்த நிலத்தை மீட்டு என்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் வேலுச்சாமி. இதுகுறித்து விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக எம்எல்ஏ மீது சொந்த அண்ணனே நில அபகரிப்பு புகார் கூறியிருப்பதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.