உதவித் தொகை பெற வர சொல்லிவிட்டு 3 மணி நேரமாக கர்ப்பிணிகளை காக்க வைத்த எம்எல்ஏ
கர்ப்பிணி உதவித்தொகை பெறுவதற்காக 8.30 மணிக்கு வர சொல்லிவிட்டு 3 மணி நேரம் கழித்து தாமதமாக வந்ததால் கர்ப்பிணிகள் அவதி அடைந்தனர்.
திருப்பரங்குன்றம்: அரசு உதவித் தொகை பெற கர்ப்பிணிகளை மணிக்கணக்கில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் காத்திருக்க வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு விழா திருப்பரங்குன்றம் பேட்டையில் நடைபெற்றது. இதில் காலை 8.30 மணிக்கு கர்ப்பிணிகள் வரவழைக்கப்பட்டனர்.
தமிழக அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவுக்கு, மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே .போஸ் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை.
இதனால் 320-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு உதவி தொகையை அதிகாரிகள் அளிக்காமல் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கர்ப்பிணிகளை காக்க வைத்தனர். இதனால் கர்ப்பிணி பெண்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
இதையடுத்து 12 மணி மேல் எம்எல்ஏ வந்தார். விழா நடைபெறும் இடம் குறுகியதாக இருந்ததால் கொட்டும் மழையில் கூட்டத்தினர் வெளியே சிரமத்துடன் உட்கார்ந்தனர்.